ஊழல் செய்வதில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் - ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஊழல் செய்வதில் தான் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
Recommended Video

சென்னை : : ஊழல் செய்வதில் தான் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த விழாவில் பேசிய முதல்வர், சென்னை மழை பாதிப்புக்கு இதற்கு முன் ஆட்சி செய்த திமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டினார், மேலும் ஸ்டாலின் மேயராக இருந்த சமயத்தில் சரியான முறையில் செயல்பட்டு இருந்தால் சென்னை சிறப்பாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், நானும் , துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு தமிழகத்தை முன்னேற்றப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அமைச்சர்களா ? விஞ்ஞானிகளா ?
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் முதல்வரும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் எல்லாம் திடீர் விஞ்ஞானிகளாக மாறிவிட்டார்கள். அவர்களைக் கண்டு அறிவியல் உலகமே வியந்து கொண்டிருக்கிறது என்றார்.

மழைநீர் தடுப்பு நடவடிக்கை என்ன ?
சென்னையில் திமுக ஆட்சியிலும், தான் மேயராக இருந்தபோதும் என்னென்ன மழை நீர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை பட்டியலிட்டார் ஸ்டாலின். மேலும், வெயில் காலத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை விடுத்து மழைக்காலத்தில் வேலை செய்வது போல வேடிக்கை காட்டி வருகிறது ஆளும் அதிமுக என்றும் குற்றம்சாட்டினார்.

முதல்வருக்கு ரெய்டு பயம்
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் திமுகவை விமர்சிப்பதிலேயே காலம்கடத்தி வருகிறார்கள் அமைச்சர்கள். இவர்களைக் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ ஏரிகளைத் தூர்வாராமல், அரசு கஜானாவைத் தூர்வாருவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்றும் பதிலடி கொடுத்தார். மற்ற எல்லோரையும் விட எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்., இருவருக்கும் தான் இப்போது ரெய்டு பயம் அதிகமாக இருக்கிறது என்றும் ஸ்டாலின் சாடினார்.

ஊழல், கமிஷன் துப்பாக்கிகள்
இதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் அரசு செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடி தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவதிலேயே அதிமுக ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள். ஊழல் செய்வதிலும், கமிஷன் வாங்குவதிலும் தான் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் விமர்சித்து உள்ளார் ஸ்டாலின்.

உடன்பிறப்புகளுக்கு நன்றி
மேலும் செயல்படாத இந்த குதிரை பேர அரசு மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்கள் தான் நீர்நிலைகளைத் தூர்வாரி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்து இருக்கிறார்கள். கருணாநிதியின் உடன்பிறப்புகளுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications