Exclusive: ''அரசியலுக்கு புதிது என்பதால் மெதுவாக தான் செயல்படுகிறேன்''.. ம.நீ.ம. உமாதேவி
அரசியலுக்கு புதிது என்பதால் அதைப்பற்றி புரிந்துகொள்ள இன்னும் தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், போகப்போக கட்சிப்பணிகளில் வேகமெடுப்பேன் எனவும் கூறுகிறார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் உமாதேவி . விருதுநகர், மதுரை மாவட்ட மக்களிடையே ஜெயவிலாஸ் நிறுவனம் என்றால் நன்கு பரிச்சயம் உண்டு. அந்த நிறுவனத்துக்கு சொந்தக்காரரான உமாதேவி, ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: அரசியலுக்கு புதிதாக வந்த உங்களுக்கு மக்கள் நீதி மய்யத்தில் இன்ஸ்டண்டாக பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டது எப்படி?
பதில்: முதலில் அந்தப்பதவியை ஏற்க தயக்கமாகவும், வியப்பாகவும் இருந்தது. இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க எனக்கு தகுதியிருக்கிறதா, திறமையிருக்கிறதா என யோசித்தேன். பிறகு சமுதாயத்திற்காக உழைக்க எதற்கு தயங்க வேண்டும் எனத் தோன்றியது, அதனால் அந்தப் பதவியை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறேன். ஏற்கனவே நான் எங்கள் மில்லில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு மனதைரியம், சட்ட வழிகாட்டல் உள்ளிட்ட பல நற்பணிகளை செய்து வந்தேன். அரசியலுக்கு தான் நான் புதிதே தவிர, மற்றபடி சமுதாயப் பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டு தான் வந்தேன்.
கேள்வி: மக்கள் நீதி மய்யத்தில் திடீரென்று இணைய என்ன காரணம்? கமலை எப்படித் தெரியும்?
பதில்: கமல்ஹாசனின் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் அவர் ஒற்றை ஆளாக அந்த ஊரையே மாற்றிக்காட்டுவார். மக்கள் பிரச்சனைகளை தன் திரைப்படங்கள் வாயிலாக கூறுவார். கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலுக்கு, எங்கள் ஜெயவிலாஸ் குடும்பத்தினர் சார்பாக ஒருநாள் மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது. அப்போது, உங்களை போன்றவர்கள் சமூகம் மீது அக்கறைகொண்டு பொதுவாழ்வுக்கு வர வேண்டும், தமிழகத்தை மேம்படுத்தும் பணியில் என்னோடு நீங்களும் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சரி வெளியில் இருந்து பேசினால் மட்டும் போதாது, அரசியலில் ஈடுபடுவோம் என முடிவெடுத்தேன்.
கேள்வி: உங்களுக்கு பெரியபதவி தரப்பட்டதால், ஏற்கனவே ம.நீ.ம.வில் உள்ள ஸ்ரீப்ரியா, கோவை சரளா உள்ளிட்டோர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறதே?
பதில்: நீங்கள் சொல்வது போன்று அதிருப்தியெல்லாம் இல்லை. தவறான புரிதல், மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை எல்லோரும் டீம் ஒர்க் தான் செய்கிறோம். நான் சென்னை கிடையாது, அருப்புக்கோட்டையில் வசித்து வருகிறேன். ஆனாலும் எனக்கு மாநில பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அருப்புக்கோட்டையில் மட்டும் செயல்பட மாட்டேன், தரப்பட்டுள்ள பதவிக்கு ஏற்றவாறு அனைத்து பகுதிகளுக்கும் செல்வேன். ஸ்ரீப்ரியா உள்ளிட்ட யாராக இருந்தாலும் ம.நீ.ம.வின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் அளித்தால் அதை தட்டாமல் நான் ஏற்றுக்கொள்வேன். எங்களை பொறுத்தவரை நீங்கள் பிரித்து பார்க்கத்தேவையில்லை, மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையோடு இணைந்து செயல்படுகிறோம்.
கேள்வி: செல்வச்செழிப்பான குடும்பத்தை சேர்ந்த உங்களால், அரசியலில் கீழிறங்கி பணியாற்ற முடியுமா?
பதில்: டவுன் டூ எர்த் என்று சொல்வார்களே, அதுபோலத் தான் நானும், இதை எங்கள் பகுதியில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். பொதுசேவைக்காக, மக்கள் பணிக்காக கீழிறங்கி பணிபுரிய எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. எனது பதவி, பட்டங்களை எல்லாம் தாண்டி சமுதாயப் பணி செய்வதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
கேள்வி: இதுவரை மக்கள் நீதி மய்யத்தில் என்ன நிகழ்ச்சி நடத்தியிருக்கிறீர்கள்?
பதில்: நான் மெதுவாகத்தான் செயல்படுகிறேன். ஏனென்றால் நான் இதற்கு முன்பு எந்த கட்சியிலும் இருந்ததில்லை, அரசியலுக்கே புதிதாக வந்துள்ளேன். மேலும், எங்கள் நிறுவனங்கள் அருப்புக்கோட்டையில் உள்ளதால் அதை விட்டுவிட்டு சென்னையில் தங்கமுடியாது. ஆனால், அதற்கென்று இப்படியே இருக்கப்போவதில்லை போகப்போக நான் கட்சிப்பணிகளில் வேகமெடுப்பேன்.
கேள்வி: ஜெயவிலாஸ் குடும்ப உறுப்பினர்கள் யாரும் உங்கள் அரசியல் பிரவேசத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லையா?
பதில்: இல்லை, அவர்களுக்கு தெரியும் நான் எதை செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று, எப்போதும் சரியான முடிவு தான் எடுப்பேன். அதனால் யாரும் எந்த ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.