தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு தொலைவில் உள்ளதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 7 செமீ மழை பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பமே அமர்களமாக இருந்தது. அடுத்தடுத்து கொட்டித்தீர்த்த மழையால் புறநகர்கள் வெள்ளக்காடாகின. பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல ஏரிகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழையாக மட்டுமே பெய்து வருகிறது. இதற்கு காரணம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து விட்டதே. எனவே இப்போதைக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.