தமிழக மீனவர்கள் பிரச்சனையில் வார்த்தை தவறிவிட்டார் மோடி: ஜி.கே. வாசன்
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனையை தீர்ப்போம் என்று தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதும், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டதும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அது குறித்து ஏற்கனவே பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இது குறித்து ஐ.நா.சபையில் தீர்மானம் வந்த போது மனித உரிமை மீறல் பிரச்சனை தொடர்பான விசாரணை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இலங்கைக்கு சென்று முழு விசாரணை நடத்துவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று வரை அனுமதி தரவில்லை. அங்குள்ள தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பிரச்சனையை தீர்ப்பதற்கோ, பாரபட்சமின்றி விசாரணை நடத்துவதற்கோ இலங்கை அதிபர் முன் வராதது என்பது அவரது மனிதாபிமானமற்ற செயலையே காட்டுகிறது.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் வரையில், மனித உரிமை மீறல் குறித்த விசாரணைக்கு உட்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா.வில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது என்பது தமிழக மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்கு எதிரானதாகும்.
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என்று தேர்தல் நேரத்தில் மோடியும், பா.ஜ.க.வும் வாக்குறுதி அளித்தார்கள். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் மீனவர்கள் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. மீனவர்களை கைது செய்வதும், துன்புறுத்துவதும் அவர்களது வலைகளை அறுப்பதும், படகுகளை சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
மீனவர்களை விடுதலை செய்தால் மட்டும் போதாது, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் இலங்கை அரசு திருப்பி தராமல் இருப்பது ஒரு புறம், மறுபுறம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் செயலில் ஈடுபடுவதும் மிகுந்த கண்டனத்துக்குறியது. இது எந்த விதத்தில் நியாயம் என கேட்க விரும்புகிறேன். 10 படகுகளின் வலைகளை இலங்கை கடற்படை சேதப்படுத்தியிருக்கின்றது.
மத்திய அரசும் இதில் மெத்தன போக்கையே கடைபிடிப்பது என்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை. இலங்கையில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 13-வது அரசியல் சாசனப்படி, சிங்களர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் வழங்கப்படாமல் மறுக்கப்படுவது என்பது இலங்கை இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து, மறு குடியமர்த்துதல், இந்தியாவிலிருந்து இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களை முழுமையாக வழங்கப்படாதது போன்றவை கண்டிக்கத்தக்கதோடு, மத்திய அரசும் இவற்றை கண்காணித்து நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அப்போதைய பாரத பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோது, அதில் அன்றைய பிரதமர் கலந்து கொள்ளாமல் இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.