தமிழக அரசு தயாரித்த காலண்டரிலும் மோடி "அலை" !
தமிழக அரசு காலண்டரில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளது.
சென்னை: தமிழக அரசு காலண்டரில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் பாஜக மறைமுக ஆட்சி நடத்துவதாக அனைவராலும் குற்றம்சாட்டப்படுகிறது. இதை அதிமுக ஆட்சியாளர்கள் மறுத்து வந்த நிலையிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பாஜக அரசுக்கு இணக்கமான சூழலாகவே தெரிகிறது.
ஜெயலலிதா இருந்த வரையில் அனைத்திலும் இரட்டை இலையின் பசுமை இருக்கும். ஆனால் தற்போது பச்சை நிறம் சாயம் போய்விட்டு அது காவி நிறமாக மாறி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்தன.
தமிழக அரசின் சார்பில் டெங்கு தடுப்பு தினம் தொடர்பாக வெளியான பேனரில் பச்சை நிறம் காணாமல் போய் காவி நிறம் இருந்தது. அதேபோல் ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு தந்த கார் பாஸ்களிலும் பச்சை நிறத்துக்கு பதிலாக காவி நிறம் இடம்பெற்றிருந்தது.
தமிழக அரசு எதை செய்தாலும் மத்திய அரசின் மனம் கோணாமல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. தமிழக சட்டசபைய கூட்டத் தொடரில் ஜிஎஸ்டிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் காலண்டரிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளதற்கு சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.