கோவை வந்தார் மோடி... உச்சக்கட்ட பாதுகாப்பு... டென்சனில் நகம் கடிக்கும் நகரவாசிகள்
கோவை : இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி கோவை வந்துள்ளார். தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரோசையாவும், கோவை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கும் வரவேற்றனர். பாஜக அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பாஜக தலைவர்கள் கோவை வந்தாலே என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ என்று டென்சனில் பதறுவார்கள் கோவை நகரவாசிகள். பிரதமர் மோடியின் வருகை நகரவாசிகளை டென்சனில் நகம் கடிக்க வைத்திருக்கிறது. அவர் வந்து செல்லும்வரை எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க வேண்டுமே என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.
கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் ரூ.650 கோடி செலவில் மருத்துவ கல்லூரி கட்டிடம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கும் விழாவில் பங்கேற்க இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி. இந்த விழாவில் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைப்பதற்காகவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்துள்ளார்.
5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில், 35 போலீஸ் சூப்பிரண்டுகள், 50 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் என 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
உச்சக்கட்ட டென்சன்
மோடி வருகையின் போது, குண்டு வெடிக்கும் என்று கூறி, மர்மநபர் விடுத்துள்ள மிரட்டல் நகரவாசிகளை நகம் கடிக்க வைத்துள்ளது. போனில் பேசிய நபரை பிடித்து விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கோவைக்கும் குண்டு வெடிப்புக்கும் நிறைய தொடர்பு உள்ளது.
1998ல் அத்வானி வருகை
அமைதிப்பூங்காவாக இருந்த கோவை நகரம் கடந்த 1997 முதலே அனல்தகிக்கும் நகரமாக மாறிவிட்டது. அப்போதைய திமுக ஆட்சி காலத்தில்
கோவையில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காவலர் செல்வராஜ் கொலையும், நெருப்பாய் பரவிய கலவரங்களையும் நேரில் பார்க்க நேரிட்டது. மீண்டும் அமைதி திரும்பிவிட்டது என்று எண்ணிய தருணத்தில்தான் அத்வானி வருகைக்காக தேதி குறிக்கக்கப்பட்டது. 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அத்வானி வருகையால் அல்லோகலப்பட்டது கோவை மாநகரம்.
குண்டுவெடிப்புகள்
இன்றைக்கு இருப்பது போல 1998களில் தொலை தொடர்பு வசதிகள் எதுவுமில்லை. யார் கையிலும் இப்படி செல்போன்கள் இல்லை. எங்காவது ஒரு எஸ்டிடி பூத்துகள்தான் இருக்கும். பிற்பகல் 3 மணிவாக்கில் திடீரென்று ஆங்காங்கே வெடித்த குண்டுகளில் 58 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். நகரமே ரத்தமயமாக மரண ஓலங்கள் கேட்டது.
அசம்பாவிதங்கள் நிகழக்கூடாதே
1998 சம்பவம் போல எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழ்க்கூடாதே என்பதுதான் கோவையில் வசிப்பவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு மூலமாக மோடி நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் நடக்கும் கொடிசியா மைதானத்தில் பொதுமக்கள், தொண்டர்கள், தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வந்தார் மோடி
இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழாவுக்காக பிற்பகல் 2.40 மணியளவில் கோவை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரோசைய்யா,மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் வரவேற்றார். பாஜக அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழிசை, எச்,ராஜா ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
நட்சத்திர விடுதியில் மோடி
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கநல்லூர் அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ள மோடி அங்கு பாஜகவினருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மாலை மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் கொடிசியா மைதானத்திற்கு வரும் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார் மோடி. மோடியின் வருகையால் உச்சக்கட்ட டென்சனில்தான் இருக்கிறது கோவை நகரம். மோடி வந்து சென்ற பின்னர்தான் நிம்மதியான தூக்கம் எங்களுக்கு என்கின்றனர் கோவைவாசிகள்.