பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எம்பி, எம்எல்ஏ ஆகலாம்! - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
காட்டுமன்னார் கோவில்: பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எம்பி, எம்எல்ஏ ஆகும் நிலை இன்று உள்ளது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கூடுதல் பள்ளி கட்டட திறப்பு விழா திங்களன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துக்கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். பணம் படைத்தவர்களுக்கு போதும் என்ற மனம் கிடையாது, இன்னும் வேண்டும் என்ற மனம்தான் இருக்கும். தற்போது எம்பி, எம்எல்ஏ ஆவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை. தேர்தலுக்கு முன்பு ரூ 300, ரூ500 என்று விட்டெறிந்தால் எம்பி எம்எல்ஏ ஆகிவிடலாம்.
காமராஜர் இல்லையென்றால் நாடுமுன்னேறி இருக்குமா? கிராம பகுதி மக்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வி அறிவு பெறமுடியும் என்ற நிலையை மாற்றி ஏழை எளியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவர் பெருந்தலைவர் காமராஜர்.
காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 10 ஆண்டுகள் சுதந்திரத்துக்காக சிறையில் இருந்தார். தியாகம் செய்துவிட்டு காமராஜர் சிறைக்கு சென்றார். இருக்கின்ற முதல்வர்கள் சிறைக்கு கிரிமினல்களாகத்தான் சென்றார்கள். நாடு சுதந்திரம் அடைந்தவுடன் உலக நாடுகள் நினைத்தன, இந்தியாவில் பசி பட்டினி ஏற்பட்டு மக்களிடையே சண்டைஏற்படும் என்று.
ஆனால் காமராஜர், நேரு, இந்திரா காந்தி ஆகியோரால் உலக அரங்கில் முன்னேறி உள்ளோம். 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த நாடாக முன்னேறிவிடுவோம். ஆங்கிலம் தெரிவதால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா இருக்கும்.
எம்பி, எம்எல்ஏ ஆக இருப்பதில் மரியாதை இல்லை. காமராஜர் போன்று கல்வி தந்தையாக இருக்க வேண்டும். ஒரு மாதம் மௌன விரதம் இருந்தேன், அரசியல் காரணமாக.
முதன் முதலாக பங்கு பெறும் நிகழ்ச்சியாக ராஜீவ்காந்தி பெயருடைய பள்ளியில் காமராஜர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். அரசியல் வேண்டாம்... இந்த கிராம மக்களுடன் நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
பணத்தை கொள்ளையடித்து யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் அரசியலில் இருக்கமுடியும்," என்றார்.