பணப்பட்டுவாடா நடந்தது உண்மையே, எந்த கட்சி என்று கூற முடியாது: பிரவீன் குமார்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா நடந்தது உண்மை தான். ஆனால் எந்த கட்சி பணம் கொடுத்தது என்பதை கூற முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்று பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்தன. மேலும் வாக்குப்பதிவு நாள் அன்று கூட ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மறுவாக்குப்பதிவு
சேலம் மற்றும் நாமக்கல்லில் அமைக்கப்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
தேதி தள்ளிவைப்பு
மறு வாக்குப்பதிவுக்கு அவகாசம் அளிக்குமாறு வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதால் தான் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திமுக
தேர்தல் பற்றி திமுக அளித்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில புகார்கள் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பணப்பட்டுவாடா
தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் பணப்பட்டுவாடா நடந்தது உண்மை தான். ஆனால் எந்த கட்சி பணப்பட்டுவாடா செய்தது என்பதை கூற முடியாது.
நடவடிக்கை
கடைசி இரண்டு நாட்கள் பணப்பட்டுவாடா நடைபெற்றது. பல்வேறு இடங்களில் பணத்தை பறிமுதல் செய்தோம், வழக்குப் பதிவு செய்தோம். இத்தனை நடவடிக்கை எடுத்தும் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் மன வருத்தம் அடைகிறேன் என்றார்.