உலகை உலுக்கிய விமான கடத்தல்கள்
சென்னை: விமான நிலையத்தில் உள்ள பல சோதனைகளையும் கடந்து ஆயுதங்களுடன் விமானத்தில் ஏறி அதை கடத்துவது என்பது சாதாரண விசயமில்லை. விமான நிலைய ஊழியர்கள், அல்லது அந்த விமான நிறுவன ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தீவிரவாதிகளோ, கடத்தல்காரர்களோ விமானத்திற்குள் எளிதாக நுழைந்து விட முடியாது.
1930களில் தொடங்கி கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாகவே விமானங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் எகிப்து நாட்டுக்குச் சொந்தமான 'எகிப்துஏர்' பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக எகிப்து நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்துள்ளது.
இன்று அலெக்சாண்டிரியாவில் இருந்து விமானம் கெய்ரோவிற்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட விமானத்ததில் 80 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்திற்குள் இருந்த மர்ம நபர், பைலட்டை மிரட்டி பயணிகள் விமானத்தை சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தை கடத்திய நபரிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிகிறது. விமானத்திற்குள் இருக்கும் கடத்தல்காரர் வெடிகுண்டை தனது உடலில் கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட விமானத்திலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் விமானத்தில் தற்போது 63 பேர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் விமானத்தை கடத்திச் சென்றதற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடத்தப்பட்ட விமானம் எகிப்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. ஐ.எஸ் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி இருக்கலாம் என எகிப்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் எகிப்துக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்பும் கடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
- உலகம் முழுவதும் பல மோசமான விமான கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. உலகின் முதல் விமானக்கடத்தல் தென் அமெரிக்க நாடான பெருவில் 1931ம் ஆண்டு நடைபெற்றது. 1932ம் ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சொந்தமான விமானம் கடத்தப்பட்டது.
- 1931ம் ஆண்டிலிருந்து1948ம் ஆண்டு வரை 9 வருட காலத்தில் 15 விமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 1958ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை உலகில் 48 விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
- 1969 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிக அதிகமான விமானக் கடத்தல்கள் இடம்பெற்ற ஆண்டாகும். அந்த ஆண்டு மட்டும் 82 விமானங்கள் கடத்தப்பட்டன.
- 1976ல், 300 பயணிகளுடன் பறந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தை விடுவிக்க மறுத்து, தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார், இடி அமீன்.
- இஸ்ரேலிய கமாண்டோ படையினர் ஒரு விமானத்தில் வந்து அதிரடி தாக்குதல் நடத்தி 7 தீவிரவாதிகளையும், 20 உகாண்டா ராணுவத்தினரையும், சுட்டுக் கொன்றுவிட்டு, 300 பிரயாணிகளையும் பத்திரமாக மீட்டனர். இடி அமீனின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன.
- 1986ம் ஆண்டு பான் ஆம் 73 ரக விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ப்ராங்பர்ட் கிளம்பியது. இந்த விமானத்தினை தீவிரவாதிகள் கடத்தினர். இந்த விமான கடத்தலில் பயணிகளை காக்க முயன்ற பணிப்பெண் கொல்லப்பட்டார்.
- கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தினர். ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். பின்னர் 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்து விமானத்தை மீட்டு வந்தனர்.
- 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி காலை, அமெரிக்காவுக்கு அன்று மோசமான நாளாகவே விடிந்தது. நான்கு ஜெட் விமானங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர்.
- தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை நியூயார்க்கின் இரட்டை கோபுரம் மீது அடுத்தடுத்து மோத விட்டனர்.இதில் இரண்டு மணி நேரங்களில் இரு பிரமாண்ட கட்டடங்களும் தூள் தூளாகி சாம்பலாகி மண்ணோடு மண்ணாக சிதைந்து போனது.
- இன்னொரு விமானம் பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானம், ஷாங்க்ஸ்வில்லி என்ற இடத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த அதி பயங்கர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 5000 பேர் உயிரிழந்தனர். இது உலகின் மோசமான விமான கடத்தலாகும்.
- இந்த சம்பவத்திற்குப் பின்னர் விமான நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் விமான நிலையங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவ்வப்போது விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications