காதலுக்காக கல்லூரி மாணவி கவுரவக் கொலை: தாய் கைது, அண்ணன் தலைமறைவு
விருதுநகர்: சாத்தூர் அருகே காதலுக்காக கல்லூரி மாணவியை கவுரவக் கொலை செய்த தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் பெரியபாண்டி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது50). இவரது மகள் பாண்டீஸ்வரி (19). கணேஷ்பாபு என்ற மகனும் இவர்களுக்கு இருக்கிறார்.
சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பாண்டீஸ்வரி 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். கணேஷ்பாபு சட்டக்கல்லூரி மாணவர் ஆவார்.
கடந்த ஆகஸ்டு மாதம் பாண்டீஸ்வரி தீயில் கருகிய நிலையில் வீட்டில் பரிதாபமாக இறந்து கிடந்தார். சமையல் செய்தபோது அவரது உடலில் தீ பிடித்து உடல் கருகியதாக பேச்சியம்மாள் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பாண்டீஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் அறிக்கையில் தீயில் கருகி இறந்த பாண்டீஸ்வரி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும், அதன் பிறகே அவர் மீது தீ வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக பாண்டீஸ்வரியின் தாயார் பேச்சியம்மாளை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவரும், மகன் கணேஷ்பாபுவும் சேர்ந்து பாண்டீஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அதன் பின்னர் உடலுக்கு தீவைத்து சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது.
கல்லூரி படித்து வந்த பாண்டீஸ்வரி, வாலிபர் ஒருவரை காதலித்தாராம். இதனை கைவிடும்படி தாய் மற்றும் சகோதரர் கூறி உள்ளனர். ஆனால் பாண்டீஸ்வரி அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து வாலிபருடன் பழகி வந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாண்டீஸ்வரியின் கழுத்தை நெரித்தபோது அவர் இறந்து விட்டதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்து வேறு வழியின்றி உடலில் தீ வைத்து விபத்துபோல் சித்தரித்ததாகவும் பேச்சியம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். கணேஷ்பாபு தலைமறைவாகி விட்டதால் அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications