தொழில் போட்டியில் மகன் கொலை: கொலையாளிகளை பழி தீர்க்க துப்பாக்கி வாங்கிய தாய் கைது
தேனி: தேனி அருகே தொழில் போட்டியில் மகனை கொன்றவர்களை பழி தீர்ப்பதற்காக துப்பாக்கி வாங்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனியில், சில மாதங்களுக்கு முன், அரிசி வியாபாரிகளை தாக்கி, ஆறு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சந்தேகப்படும் நபர் ஒருவரை போலீசார், கண்காணித்து வந்தனர். சம்பந்தப்பட்ட அந்நபர் அடிக்கடி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சீதாராம்தாஸ் நகரைச் சேர்ந்த 50 வயது சகுந்தலா என்ர பெண்மணியின் வீட்டிற்கு வந்து செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், சகுந்தலாவை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த சகுந்தலாவிடம் இரண்டு வாலிபர்கள் ரகசியமாக ஒரு பொருளை கொடுத்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
அதன் தொடர்ச்சியாக சகுந்தலா வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதில், அவரது வீட்டில் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள், கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர். ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக போலீசார் சகுந்தலாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சகுந்தலா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தன் மகனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதற்காகவே துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது:
என் மகன், சரவணன், 25, மதுரை, செல்லூரில், நிதி நிறுவனம் நடத்தி வந்தான். தொழில் போட்டி காரணமாக, அவனை, சிலர், 2009 ம் ஆண்டு, கொலை செய்து விட்டனர். என் மகனை கொன்றவர்களை, பழி வாங்கவே, நான், துப்பாக்கி வாங்கினேன். இந்த துப்பாக்கியை, என் மகனின் நண்பர்களான, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த, நேருபாண்டி மற்றும் மணி ஆகியோர் கொடுத்தனர்' எனக் கூறியுள்ளார்.
சகுந்தலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேருபாண்டி மற்றும் மணியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications