பெத்த மனம் கல்லு.. பிள்ளை மனம் பித்து.. கோவையில் பயங்கரம்
பெத்த மனம் கல்லு.. பிள்ளை மனம் பித்து.. கோவையில் பயங்கரம்
Recommended Video
கோவை: "பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" இதெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகிறது. அந்த பிள்ளையின் கல்லு ஆவதற்கு முன்னே தாய் பித்து செய்த வேலைதான் இது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பகுதி சிவானந்தபுரம். இங்கு வசித்து வரும் தம்பதி கார்த்திகேயன்-வனிதா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2-வதாக வனிதாவுக்கு குழந்தை பிறந்தது. அது ஒரு அழகான பெண் குழந்தை. பெயர் கவிஸ்ரீ.
குழந்தையை காணோங்க...
இந்நிலையில் வனிதா, கார்த்திகேயனுக்கு போன் செய்து அலறியடித்து கொண்டு, "குழந்தையை காணோங்க.." என்றார். அதற்கு கணவனோ எப்படி என அதிர்ந்து கேட்க, "துணி துவைச்சிக்கிட்டு இருந்தேன்ங்க.. வந்து பார்த்தா குழந்தையை காணோம்" என்றார்.
வனிதாவின் உளறல்
இதைக்கேட்ட கார்த்திகேயன் வீட்டுக்கு விரைந்து வந்து அக்கம் பக்கம் வீடுகளில் தேடினார். எங்கேயும் குழந்தை இல்லை. இதனால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை துவக்கினர். அவர்கள் முதலில் விசாரிக்க ஆரம்பித்ததே வனிதாவிடம்தான். ஆரம்பமே வனிதா உளறல்தான். தங்கள் பாணியில் வனிதா விசாரணையில் கிடுக்கிப்பிடி போட்டனர் போலீசார். விஷயம் ஒவ்வொன்றாக வர தொடங்கியது.
2-வதும் பெண் குழந்தை
முதல் குழந்தை பெண் குழந்தையாம். அதனால் 2-வதும் பெண் குழந்தை என்பதால் வனிதாவுக்கு பிடிக்கவில்லையாம். இரண்டாவது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று விரும்பினாராம். பல நாள் மன உளைச்சலில் இருந்தாராம். அதனால் குழந்தையின் கழுத்தை தானே அறுத்துள்ளார். பின்னர் தன் கண்முன்னே அந்த பச்சிளம் குழந்தை இறந்ததும் தூக்கி கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசிவிட்டு வந்துள்ளார்.
வனிதா கைது
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வனிதா சொன்ன குப்பை தொட்டியில் பார்த்தால், குழந்தை கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அந்த குழந்தையை 10 மாதம் சுமந்து பெற்ற வனிதாவை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.