மாத்தி மாத்தி பேசும் தம்பிதுரை.. இவர் எப்பவுமே இப்படித்தான் பாஸ்!
அதிமுக இணைப்புக் குழு விரும்பினால் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரிக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக ஜெயலலிதா மரணத்தை ஓபிஎஸ் பயன்படுத்துவதாக கூறி வந்த தம்பிதுரை தற்போது திடீரென ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நியமிக்கப்படும் குழு விரும்பினால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என அதிமுக அம்மா அணியின் எம்பியும் லோக்சபா துணைத் தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக ஓபிஎஸ், ஜெயலலிதா மரணத்தை பயன்படுத்துவதாக கூறி வந்த தம்பிதுரை தற்போது திடீரென ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரப் போட்டி
சசிகலாவின் அதிகாரப் போட்டியால் அதிமுக இரு அணிகளாக உடைந்தது. இதைத்தொடர்ந்து சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்தே விரட்ட முடிவு செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறினார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரும் சந்திக்கவிடாமல் வேலியாக இருந்த சசிகலா குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய அவர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றார்.

தினகரன் சிக்கல்
இந்நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை பெற அதிமுக அம்மா அணியின் டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்தது டெல்லி போலீஸ்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரிடம் விசாரிக்க சென்னையில் டெல்லி போலீசார் முகாமிட்டுள்ளனர். லஞ்சம் விவகாரத்தால் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலைச்சின்னம் கிடைக்க இருந்த ஒரு சில வாய்ப்புகளும் நழுவியது.

அதிமுகவிலிருந்து விலக்கம்
மேலும் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச்சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அணி அமைச்சர்கள், ஓபிஎஸின் கோரிக்கையை ஏற்று சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தனர்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வது குறித்து குழு அமைக்கப்படும் என்றார். அந்த குழு விரும்பினால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தம்பிதுரை கூறினார்.

அந்த வாய்
சசிகலாவுடன் மோதல் ஏற்பட்ட பிறகு ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததற்கு தம்பிதுரை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என வாய்க்கு வாய் சின்னம்மா புகழ் பாடி வந்தார் தம்பிதுரை.

இது வேற வாய்
அரசியல் ஆதாயத்துக்காக ஓபிஎஸ் ஜெயலலிதா மரணத்தை பயன்படுத்தி கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில் குழு விரும்பினால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என அவர் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications