வயது 10 தான்... ஆனால் 400 மொழிகள் தெரியுமாம்.. கலக்கும் அக்ரம்!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 வயது அக்ரம் என்ற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். இவர் இஸ்ரேலில் படித்து வருகிறாராம்.
வாழ்க்கைக்கு ஐந்து மொழிகளும், வாழ்வதற்கு ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பது மாணவர் அக்ரம் கொடுத்த கூடுதல் தகவல்.

புத்திக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

நானூறு மொழிகள்
நானுறு மொழிகள் அறிந்த பத்து வயது மாணவர் அக்ரம் மாணவர்களிடம் சிறப்புரை நிகழ்த்தினார். அக்ரம் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். ஆன்லைன் மூலமாக இஸ்ரேலில் உள்ள கல்வி முறையில் படிக்கிறார். அரசு உதவி பெறும் பள்ளியில் அவர் பயிற்சி தந்தது இதுவே முதல் முறையாகும். அவர் பேசும்போது இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளான அரபிக், அச்செனிஸ், ஆப்ரிக்கன்ஸ், அல் பேனியன், அமசைக் போன்ற நானுறு மொழிகளை மூன்று நிமிடத்தில் கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

40 மொழிகளில் நல்லா இருக்கீங்களா
நீங்கள் எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் என்பதை நாற்பது மொழிகளில் பேசி காட்டினார். மேலும் தேவகோட்டை என்கிற வார்த்தையை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதி காண்பித்து மாணவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி? என்பது தொடர்பாக மூளைக்கு பயிற்சி அளிக்கும் இருபத்தைந்து பயிற்சி முறைகளை செய்து காண்பித்தார்.

இயற்கை உணவு அவசியம்
இயற்கை உணவு முறைகளை உண்பதால் தனக்கு எந்த வியாதியும் இது வரை வந்தது கிடையாது என்றும் ,இது வரை தான் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது என்றும் தெரிவித்தார். தற்போது தான் இஸ்ரேல் நாட்டில் படிப்பதாகவும் தெரிவித்தார். மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றும் தெரிவித்தார். இதனை பார்த்து அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.

உளவியாளர் பிரியன்
உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இயற்கை உணவு மூளை வளர்ச்சியை அதிகரிக்கும். கேழ்வரகு, சாமை, சோளம், கம்பு, குதிரைவாலி போன்ற இயற்கை உணவை உண்பதால் எந்த நோயும் அண்டவில்லை .இதுவரை தனது குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை சென்றது கிடையாது. சர்க்கரையை தவிர்த்து இனிப்புகளையும் தவிர்த்து இளமையுடன் வாழ பழகி கொள்ளுங்கள். சீதாப் பழம், கொய்யா பழம், சப்போட்டா பழம் அதிகம் சாப்பிடுங்கள் என்றார்.

ஆறு மொழிகள் அவசியம்
மொழி குறித்து அவர் கூறுகையில், வாழ்க்கைக்கு தமிழ், அரமைக், ஹிந்தி, ஸ்பானிஷ், ஹீப்ரு என ஐந்து மொழிகளும், வாழ்வதற்கு ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ் என ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். சைனீஸ் மொழியை தொண்ணுற்று ஐந்து கோடிபேர் பேசுறாங்க என்றார். கதைகளின் வழியாக மாணவர்களுக்கு அதிகமான படங்களை சொல்லி கொடுங்கள் என ஆசிரியர்களுக்கும், கதைகளை அதிகமாக கேட்க சொல்லி மாணவர்களிடமும் வேண்டுகோள் வைத்து பேசினார். தான் இது வரை பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் இதனை சொல்வதாகவும் தெரிவித்தார்.
மாணவர்கள் ராஜேஸ்வரி, தனலெட்சுமி, ரஞ்சித், பரமேஸ்வரி, வித்யா, கார்த்திகா, சபரி, செந்தில், விக்னேஷ், ஜீவா, சாய் புவனேஸ்வரன், சஞ்சீவ், சந்தியா, சுருதி, விஜய் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications