விஜயபாஸ்கர் விவகாரம்... அதிமுகவுக்கு இனி முத்தரையர் ஓட்டு கிடையாது... தோற்கடிக்கப் போவதாக தீர்மானம்!
புதுக்கோட்டை: முத்தரையர் சமூகத்தை இழிவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததால் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்றும் அக்கட்சியை தோற்கடிப்போம் எனவும் முத்தரையர் சமூகத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய தலைவர் கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கடந்த மாதம் 25-ந் தேதி விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
தங்களது பகுதியில் தாய்சேய் நல விடுதி அமைக்க விஜயபாஸ்கரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கெங்கையம்மாளை ஜாதி பெயர் சொல்லி விஜயபாஸ்கர் திட்டியதாக முத்தரையர் சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி போராட்டமும் நடத்தினர்.
ஆனால் கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோர் அ.தி.மு.கவைவிட்டே நீக்கப்பட்டனர். இது அச்சமூகத்தினரிடத்தில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் முத்தரையர் சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் நெருக்கடி கொடுத்ததால் அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மறமடக்கி என்ற இடத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
- கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் 5 லட்சம் பேரின் உறுப்பினர் அட்டையை தலைமைக்கு அனுப்ப பிரச்சார இயக்கம் நடத்துவது மற்றும் அனுப்புவது.
- சாதி, மத, இன, மொழி துவேசத்தில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் "சாதி துவேசத்தில்" ஈடுவடுவதை கண்டிக்காத மற்றும் நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இழந்து ஆளுநரிடம் புகார் கொடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோருவது, தவறும் பட்சத்தில் சென்னையில் 50 ஆயிரம் முத்தரையரை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது.
- பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் சிலை அமைத்துக்கொடுத்து 20 ஆண்டுகளாக முத்தரையர் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வரும் அதிமுக உடனடியாக பேரரசர் சிலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், சிலையை எங்கள் சமூகமே அமைத்துக்கொள்ளும்.
- நீண்டகாலமாக வஞ்சிக்கப்படும் முத்தரையர் சமூகத்த்தின் 29 உட்பிரிவுகளையும் இணைத்து 15% தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரபடுத்துவது
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.