ஜல்லிக்கட்டு இளைஞர்களின் என் தேசம் என் உரிமை கட்சி போட்டி! சமூக சேவகி வேட்பாளரானார்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட என் தேசம் என் உரிமை கட்சி வேட்பாளராக சமூக சேவகி ஜெயந்திசந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுகி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அதிமுக இறு அணிகளாக மோதுகிறது. தீபாவும் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆரம்பித்த 'என் தேசம் என் உரிமை' கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை நேற்று அக்கட்சியினர் அறிவித்தனர்.

வித்தியாசமான தேர்வு
வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் வித்தியாசமாக நடைபெற்றது. தொகுதி மக்களின் கருத்து மற்றும் அவர்கள் அளித்த மதிப்பெண் அடிப்படையில் அக்கட்சியினர் வேட்பாளரை தேர்ந்தெடுத்தனர்.

மக்கள் கருத்து
இதன் அடிப்படையில், ஆர்.கே.நகர் தொகுதியின் எழில்நகரில் வசித்து வரும் ஜெயந்திசந்திரன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டனர். இதையடுத்து தொகுதியில் அவர் தீவிர பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

சமூக சேவகி
என் தேசம் என் உரிமை கட்சி சார்பில் போட்டியிடும் ஜெயந்திசந்திரன் எம்.ஏ. பட்டதாரி ஆவார். சமூக சேவையில் ஆர்வமுடைய இவர் ஆர்.கே. நகர் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்று கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

புதன்கிழமை வேட்புமனு
ஜெயந்தி சந்திரனுக்கு, திருமணம் ஆகி சந்திரன் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயந்திசந்திரன் வருகிற 22ம் தேதி, அதாவது புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இக்கட்சிக்கான அரசியல் பலத்தை அறிந்து கொள்ள ஆர்.கே.நகரை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications