விஷ்ணுப்பிரியா வழக்கு: தலைமைச்செயலர், உள்துறைச் செயளர், டிஜிபி பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் உள்துறை செயலர் மற்றும் டிஜிபியும் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பி-யாகப் பணிபுரிந்துவந்த விஷ்ணுப்பிரியா, சில மாதங்களுக்குமுன் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், உயர் அதிகாரியின் அழுத்தம்தான் இந்த தற்கொலைக்குக் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு, காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
விஷ்ணுப்பிரியாவின் உயர் அதிகாரியான நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததையடுத்து, விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி சிபிஐ விசாரணைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி அவர் மீண்டும் கடந்த பிப்ரவரி 10ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்த வழக்கில் மாவட்ட எஸ்.பி. டிஐஜி மற்றும் டிஜிபி அலுவலகத்திலுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோரின் தலையீடு உள்ளதாகவும், எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அக்னி கோத்திரி மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் இது குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் உள்துறை செயலர் மற்றும் டிஜிபியும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த முறையே பதில் மனு தாக்கல் செய்யாததால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.