கேரளாவில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் உதை, ஆனால் தமிழகத்தில்.... சீமான் வருத்தம்
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையால் தமிழகம் விரைவில் ஆபத்துகளை சந்திக்கும் என்று சீமான் குறிப்பிட்டு உள்ளார்.
புதுக்கோட்டை : ஓட்டுக்கு காசு கொடுக்கும் முறையால் தமிழகமே சீரழிந்து கிடக்கிறது. இதை மாற்றாவிட்டால் விரைவில் பெரிய ஆபத்து வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சீமான், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு போதிய வேகம் காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் பொதுமக்களுக்கு ஒரு உண்மையை உணர்த்தி இருக்கிறது. பணம் கொடுப்பவர்களுக்கு தான் வெற்றி என்பது மோசமான உதாரணம். தமிழக மக்கள் அதை விரைவில் உணர்வார்கள். ஆனால், அதற்குள் தமிழ்நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மற்ற மாநிலங்களை விட எதில் மிஞ்சி நிற்கிறோமோ இல்லையோ ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவதில் நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறோம். இது நமது மக்களுக்கு மோசமான தலைகுனிவு. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை மக்களே விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பணம் தரவில்லை என்றால் விரட்டி அடிக்கும் நிலை வந்துவிடுமோ என்று பயமாக உள்ளது.
பணத்தை முதலீடு செய்பவர்கள் அதைத் தான் அறுவடை செய்ய நினைப்பார்கள். இதனால் வளர்ச்சி என்பதே சாத்தியமில்லாமல் போகும். இதனால் தான் மக்களின் பிரச்னையில் அக்கறையற்ற அரசாக இந்த அரசு திகழ்கிறது. விவசாயிகள் பிரச்னை, மீனவர்கள் விவகாரம் என்று எதிலும் தீர்வு காண முடியாத அரசாக இருக்கிறது. விரைவில் இந்த ஆட்சி கலையும் என்று சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications