கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி.. சீமான்
திருச்சி: உள்ளாட்சித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து வரும் லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
திருச்சி ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சட்டசபைத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார்.
அவரது பேட்டியிலிருந்து...
தனித்தே போட்டியிடுவோம்
உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து மேயர் பதவி வரை அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவோம்.
பாதிக்குப் பாதி பெண் வேட்பாளர்கள்
அதேபோல லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம். இதில் 20 இடங்களில் பெண்கள் நிறுத்தப்படுவர். 20 இடங்களில் ஆண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவர்.
கூட்டணியே கிடையாது
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்தே போட்டியிடுவோம். சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் கூட 4.5 லட்சம் மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது மிகப் பெரிய விஷயம். நல்லாட்சி மலர, வெளிப்படையான, ஊழலற்ற அரசு அமைய தொடர்ந்து பாடுபடுவோம்.
பணம் விளையாடி விட்டது
மாற்று அரசியல் சக்திகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற கருத்தை நான் நிராகரிக்கிறேன். இரு முக்கிய திராவிடக் கட்சிகளை மட்டுமே மக்கள் விரும்புகின்றனர் என்று சொல்வதையும் நான் ஏற்க மாட்டேன். பணம் விளையாடி விட்டது. இந்தத் தேர்தலில் ஈடுபட்ட அனைவருக்கும் இது தெரியும்.
தவறி விட்டது தேர்தல் ஆணையம்
பண பலத்தால்தான் மற்ற அனைவரும் வீழ்த்தப்பட்டுள்ளனர். பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டது தேர்தல் ஆணையம். அது சரியாக செயல்பட்டிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம்.
பெரிய சக்தியாக உருவெடுப்போம்
எங்களது இலக்கு அடுத்த சட்டசபைத் தேர்தல்தான். அடுத்த சட்டசபைத் தேர்தலுக்குள் நாங்கள் மிகப் பெரிய சக்தியாக வளர்வோம். அதற்கேற்ப அடுத்த ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைக்கப் போகிறோம் என்றார் அவர்.