ராஜபக்சே வருகையை கண்டித்து திருப்பூரில் நாம் தமிழர் கட்சி போராட்டம்
திருப்பூர்: இலங்கை போரில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து திருப்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்கும் விழா டெல்லியில் நாளை நடைபெறுகிறது. மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அழைப்பை ஏற்றும் விழாவில் கலந்துகொள்ள இந்தியா வருகிறார்.
ராஜபக்சே இந்தியா வருவதற்கு நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து திருப்பூரில் 24.05.14 அன்று திருப்பூர் மாநகராட்சி முன்பு மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். இன அழிப்பிற்கெதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் உமர்கயான் கலந்து கொண்டு கண்டண உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மோகனசுந்தரம், செல்வம், பரமசிவம். கெளரி சங்கர், காங்கேயம் சண்முகம், மாவட்ட இணை பொருப்பாளர்கள் சுபசிவக்குமார், முருகானந்தம், மாவட்ட இளைஞர் பாசறையை சேர்ந்த சரவணன், சீனிவாசன், ஸ்ரீதர், அழகுமுருகன், தங்க மாரி, மாவட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த பிரகாஷ், செந்தில், மாவட்ட மகளிர் பாசறை மஞ்சுளா, பூமித்தாய் மற்றும் ஏராளமான நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்தும், மோடி அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க கோரியும் கோஷம் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications