கிடைத்த இடத்தில் ஓய்வு, களப்பணியாற்றிய மாற்றுத்திறனாளிகள்... நாம் தமிழர் "வளர்ச்சி பார்முலா" இது
நாம் தமிழர் கட்சி ஆர்கே நகர் தேர்தலில் 2 சதவீத வாக்குகளைப் பெற்று 4வது இடத்தை பெற்ற நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த இளைஞர் படையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஆர்கே நகர் தேர்தலில் 2 சதவீத வாக்குகளைப் பெற்று 4வது இடத்தை பெற்ற நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த இளைஞர் படையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து வாங்கிய வாக்குகள் அல்ல, உயர்தர ஏசி அறைகளில் தங்கி களமாடிய வாக்குகள் அல்ல ஆர்கே நகர் வெற்றி மண்டபத்தில் நாங்கள் தங்கி காளமாடி பெற்ற வாக்குகள் என்று சமூக வலைதளங்களில் அவர்கள் பெருமைபட்டு வருகின்றனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் கடந்த முறை நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கை தேவி 2 ஆயிரத்து 513 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால் அப்போது இருந்த நிலைமை வேறு ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியிலேயே எதிர்த்து போட்டியிட்டு 2 ஆயிரத்து 500 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.
தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலும் வேறு விதமான தேர்தலே. ஜெயலலிதாவின் தொகுதி அவர் இல்லாத தேர்தல் களம் என்பதால் சுமார் 50 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கினார். இவர்களோடு ஒரு போட்டியாளராக தேர்தல் களம் கண்டது நாம் தமிழர் கட்சி.
மக்களை சந்தித்து
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதே போன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலைக்கோட்டுதயத்திற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இளைஞர் படை
நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரத்தில் பண பலம் இல்லை, படை பலம் இல்லை, அதிகார பலமும் இல்லை என்ற போதும் அவர்கள் 4 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் இருந்த இளைஞர் படை.
பாட்டாக சொன்ன இளைஞர்கள்
பிரச்சாரத்தின் போது வீதி நாடகங்கள் போல தாரை, தப்பட்டைகளை கழுத்தில் போட்டுக் கொண்டு அரசின் அவலங்களை பாடல்களாக பாடிச் சென்றனர் இளைஞர்கள். இதே போன்று இளைஞர்களுடன் மாற்றுத் திறனாளிகளும் நாம் தமிழர் கட்சிக்காக தேர்தல் களத்தில் பணியாற்றினர்.
கிடைத்த இடத்தில் ஓய்வு
திராவிட கட்சியினர் போல் காசு கொடுத்து வாங்கிய வாக்குகள்அல்ல, குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து வாங்கிய வாக்குகள் அல்ல
உயர்தர ஏசி அறைகளில் தங்கி களமாடிய வாக்குகள் அல்ல. ஆர்கே நகர் வெற்றி மண்டபத்தில் நாங்கள் தங்கி காளமாடி பெற்ற வாக்குகள் என்று அவர்கள் பெருமையோடு இந்த தேர்தல் பணியாற்றியதை குறிப்பிட்டுள்ளனர்.
|
தேர்தல் பணி
இதே போன்று ஆர்கே நகரில் தேர்தல் பணியாற்ற வந்தவர்கள் பூங்காக்களில் படுத்து உறங்கி தேர்தல் பணியாற்றியுள்ளனர். டுவிட்டரில் வலம் வரும் இந்த இளைஞர்களின் தேர்தல் பணி குறித்த புகைப்படங்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.