நல்ல தலைவனே இல்லை என்ற ரஜினியின் பேச்சு ஆணவத்தனமானது... சீமான் கொந்தளிப்பு!
தமிழகத்தில் நல்ல தலைவன் இல்லை என்ற ரஜினியின் பேச்சு திமிர்த்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் நல்ல தலைவன் இல்லை என்ற ரஜினியின் பேச்சு திமிர்த்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரையெல்லாம் பார்த்தால் தலைமைப் பண்பு இருப்பவர்களாகத் தெரியவில்லையா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது. அதனை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய முதல் அரசியல் பேச்சின் போது தெரிவித்தார்.
ரஜினி தெரிவித்த இந்த கருத்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாததை சுட்டிக்காட்டி ரஜினி இவ்வாறு பேசினார்.
அடிமைப்படுத்தும் முயற்சி
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியின் கருத்துக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். என்னுடைய நிலத்தில் இருந்து உன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி என்னை அப்புறப்படுத்தினால் நான் அடிமை. என் நிலத்தில் நான் ஆள்வேன் என்பது உரிமை, நான் ஆளாமல் இன்னொருவன் ஆள்வது என்பது அடிமை.
அடிமையாக வாழ விரும்பவில்லை
நாங்கள் அடிமையாக வாழ விரும்பவில்லை, எவர் வந்தாலும் எதிர்த்து அரசியல் போர் புரிவோம். மக்களை தட்டி எழுப்புகிறோம் என்ற கதையெல்லாம் இங்கு வேண்டாம். கர்நாடகாவிலோ, மஹாராஷ்டிராவிலோ போய் தட்டி எழுப்புங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.
நக்கல் பேச்சு
எல்லோரும் எங்கள் நிலத்தில் வந்து வீடு கட்டி குடியேறிவிட்டு எங்களை ஆள்வேன் என்று சொல்வது நக்கல். தலைவனே இல்லை என்றால் எப்படி, இந்தத் திமிர், ஆணவத்திற்கான தைரியம் யார் கொடுக்கிறார்கள்.
ஆணவப் பேச்சு
நல்லகண்ணு, நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன், அன்புமணி உள்ளிட்டோரெல்லாம் இங்கு இல்லையா. இவர்களுக்கெல்லாம் தலைவனாகும் தகுதி இல்லையா. யாருக்குமே தலைமைக்கான பண்பு இல்லை என்றால் இது என்ன பேச்சு. ஆணவப் பேச்சு, திமிர் பேச்சு.
ஊடகங்களால் ரஜினி பெரிதுபடுத்தப்படுகிறார்
ஊடகங்கள் ரஜினியை பெரிதுபடுத்துகின்றன. அவர் வருகிறார், நடக்கிறார், தும்முகிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். கொஞ்ச நாட்கள் அவரை காட்டாமலே இருங்கள் போய் படுத்துவிடுவார் என்று சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.