சிம்பு, அனிருத்தின் கொச்சையான பீப் பாடலுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்- மன்னிப்பு கேட்க அட்வைஸ்!!
சென்னை: கொச்சையான, பெண்களை மிகவும் இழிபடுத்தும் வகையிலான பீப் பாடலை இயற்றி வெளியிட்ட நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சினிமா என்பது கலைக்கும், பல கோடி வியாபாரத்துக்கும் இடையே பயணிக்கிற ஊடகமாக இருக்கிறது. அதை மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால் அதற்கு சில எல்லைகளை தளர்த்தி விரிவாக்கி தந்து இருக்கிறார்கள். அதை உணர்ந்த சினிமா கலைஞர்கள் பலரும் சினிமா ஊடகத்தை திறம்பட பயன்படுத்தி வெற்றியும் பெற்றுவருகிறார்கள். அவர்களை மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளாக கொண்டாடியும் வருகிறார்கள்.
கண்டனம்- கண்டிக்கத்தக்கது
ஆனால் அதுவே எல்லை மீறி செல்லும்போதும் முகச்சுளிப்பையும், சினத்தையும் வெளிப்படுத்தி எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். முறையாக வெளியிடப்பட்டதா, திருட்டுத்தனமாக கசிந்ததா என்ற சந்தேகத்திற்கிடையே சமீபத்தில் அனிருத் இசையமைத்து, சிம்பு எழுதி பாடியதாக வெளியாகி இருக்கும் பாடலில் ‘பீப்' செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்திற்கு விடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவுபடுத்தியும் இருப்பதினால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது.
மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்
ஒரு கலைஞனின் கருத்து மக்களிடையே சென்றடைந்து அது எதிர் விமர்சனங்களை ஏற்படுத்துகிறபோது, அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது. அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்தோம்.
பழிவாங்குதல் அல்ல
அதோடு தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் வேலை செய்து வந்தது. தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக கருத்து தெரிவித்தால் கடந்த தேர்தலில் எங்கள் அணிக்கு எதிராக சிம்பு தீவிரமாக செயல்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்றும் எங்கள் கருத்தாக இருந்தது.
|
செயற்குழுவில்...
வருகிற 26-ந் தேதியில் நடக்க இருக்கும் செயற்குழுவில் இதுபற்றி விவாதித்து கருத்து தெரிவிக்கலாம் என்றிருந்தோம். ஆனால் சூழ்நிலை கருதி நிறுவனக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரைவில் இதிலிருந்து விடுபட்டு புதுப்பொலிவோடு கலைப்பணி ஆற்ற வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
அறிவுறுத்தல்
தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் பீப் பாடல் என்கிற நிகழ்வு சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா கலைஞர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் உருவாகக்கூடாது என்ற விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் என்பதை இச்சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுறுத்த விரும்புகிறது.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.