கொட்டித் தீர்த்த மழையால் நாமக்கல்லில் நிரம்பி வழியும் 10 ஏரிகள்
நாமக்கல்: நாமக்கல்லில் கொட்டித் தீர்த்த மழைக்கு இதுவரையில் 10 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும், கிட்டதட்ட 616 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "நாமக்கல் மாவட்டத்தின் கடந்த 10 ஆண்டு சராசரி மழை அளவை கணக்கிடும் போது, இயல்பான மழை அளவு 716 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டில் இதுவரை சராசரியாக 616 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 554 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி இருந்தது.
அதிகபட்சமாக திருச்செங்கோடு பகுதியில் 894 மில்லி மீட்டரும், குமாரபாளையம் பகுதியில் 776 மில்லி மீட்டரும், சேந்தமங்கலம் பகுதியில் 763 மில்லி மீட்டரும், நாமக்கல் பகுதியில் 446 மில்லி மீட்டரும் மழைபதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக புதுச்சத்திரம் பகுதியில் வெறும் 47 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளது. எனவே அந்த பகுதிக்கு கூடுதலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. இவற்றில் சூரியம்பாளையம், ஏமப்பள்ளி உள்ளிட்ட 10 ஏரிகள் இதுவரை நிரம்பி உள்ளன. திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. ஆனால் நாமக்கல்லை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை.
கடந்த வாரம் பெய்த மழைக்கு ஏ.இறையமங்கலம், எஸ்.இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அங்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.