ஆங்கிலோ இந்திய பெண் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் ... நியமன எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்!
சென்னை: தமிழக சட்டசபையின் நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்திய பெண் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டசபைக்கு மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக உறுப்பினர் சீனிவேல் மரணம் அடைந்தார். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களை தவிர்த்து, 235-வது நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது மரபு. கடந்த 5 ஆண்டுகளாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் நியமன உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் இன்று பதவியேற்றுள்ளார்.
ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ எதன் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார் என்று தெரியுமா?
முற்காலத்தில், ஆங்கிலேயேர்கள் இந்தியாவில் வந்து வணிகம் செய்தபோது, தங்களுக்கான இணையர்களை இந்தியாவிலேயே தேர்ந்தெடுத்தனர். இதன் காரணமாக, அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் 2 நியமன எம்பிக்களுக்கும், எட்டு மாநிலங்களில், தலா ஒரு நியமன எம்எல்ஏவும் வழங்கி பிரிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலோ இந்திய மக்களுக்கு உரிய பிரிநிதித்துவம் இல்லாத பட்சத்தில், அந்த சமுதாயத்தில் இருந்து ஒருவரை நியமன எம்எல்ஏ-வாக நியமனம் செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏவாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தவரான நான்சி ஒரு டாக்டர் ஆவார். மதுரையில் வசித்து வருகிறார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.