நந்தினி படுகொலை: சீமான் ஆறுதல்- டின்னர் சாப்பிட்ட பொன். ராதாகிருஷ்ணன்
இந்து முன்னணி அமைப்பு நிர்வாகியால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட அரியலூரை சேர்ந்த நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய
அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் குடும்பத்தினரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் நந்தினி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நந்தினி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுபோன்ற செயல்கள் சமூகத்தின் சாபகேடுகள் என்று குறிப்பிட்டார். மேலும், இந்த நிலை தமிழகத்தில் முற்றாக மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக அறிக்கை வெளியிட்ட சீமான், தங்கை நந்தினி வன்புணர்ச்சி செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட அந்தக் கோர நிகழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தான் நேசித்த ஒரு உயிரைத் தன்னால் உருவான உயிரை ஈவு இரக்கமே இல்லாமல் சிதைக்கும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள்? நம்பி வந்த பெண்ணை நண்பர்களோடு சூறையாடும் கொடூரத்தை யார் அவர்களுக்குச் சொல்லித்தந்தது? நினைக்க நினைக்க மனம் பதைபதைக்கிறது.
இந்தச் சமூகம் இப்படியான மனிதர்களையா கொண்டிருக்கிறது என்பதை நினைக்கையில் எதிர்காலத்தைப் பற்றிய அச்ச உணர்வு மேலோங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று உயிருக்கு மேலாக ஒழுக்கத்தைப் போதித்த சமூகத்தின் இன்றைய நிலை மிகுந்த வேதனையைத் தருகிறது.
பெண்கள் உடுத்தும் உடைகள் பாலியல் வன்புணர்ச்சியைத் தூண்டுகிறது எனப் போதிக்கும் இச்சமூகம், 6 வயது சிறுமியும், 60 வயது மூதாட்டியும் தான் உடுத்தும் ஆடையால்தான் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல விளைவதில்லை. ஒருதலைக்காதல் என்ற பெயரில் கொலைசெய்யப்படும் பெண்களின் ஒழுக்கம் குறித்த ஆராய்ச்சிகளை ஆண்களிடம் உட்படுத்துவதற்குத் தயாரில்லை. விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு சமூகத்துப் பெண்கள் மீது ஆணாதிக்க வன்முறை அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இத்தொடர் தாக்குதல்கள் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே! என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொன். ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அரியலூர் சென்றார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரியலூரைச் சேர்ந்த நந்தினியின் வீட்டிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின் நந்தினியின் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். உயிரிழந்த நந்தினியின் குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்கவும், பாதுகாப்பு வழங்கிடவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் நந்தினி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.