ஜெயிலில் அடைபட்டிருப்பது "காசா கிராண்டே" அனிருதன்.. கிலியில் தவிப்பதோ "நத்தம்".. ஏன்?
காசா கிராண்டே எம்.டி. அனிருதன் சிறைக்கு போக நேரிட்டதால் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதிர்ந்து போயுள்ளராம். அனிருதன் நிறுவனங்களில் 'நத்தம்' மகன் அமர் ஏராளமான முதலீடு செய்துள்ளாராம்.
சென்னை: கட்டுமான துறையின் முன்னணி நிறுவனமான காசா கிராண்டேவின் எம்.டி அனிருதன் சிறைக்குள் தள்ளப்பட அடுத்து என்ன நடக்குமோ என திகிலில் இருக்கிறார் ஓபிஎஸ் அணியின் தளபதிகளில் ஒருவரான மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓரம்கட்டப்பட்டவர் நத்தம் விஸ்வநாதன். சட்டசபை தேர்தலில் அவர் வெல்லக் கூடாது என்பதற்காகவே திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுகவின் ஐ. பெரியசாமியை எதிர்த்து நிற்க வைத்தார் ஜெயலலிதா.
தேர்தலில் தோற்றுப் போன நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து கட்சிப் பதவிகளையும் பறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் செல்லாக்காசாகிவிட்டார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்ப ஓடோடி வந்து ஒட்டிக் கொண்டார் நத்தம் விஸ்வநாதன்.

காசா கிராண்டே கைது
ஓபிஎஸ் அணியின் தளபதிகளில் ஒருவராக வலம் வந்த நத்தம் விஸ்வநாதன் இப்போது தமக்கு எங்கிருந்து எப்படி நெருக்கடி வருமோ என திகில் உறைந்துபோயுள்ளார். இதற்கு காரணமே கட்டுமான துறையின் முன்னணி நிறுவனமான காசா கிராண்டே எம்.டி அனிருதன் சிக்கியதுதானாம்.

அன்றைய ரெய்டு
காசா கிராண்டேவின் அனிருதனுக்கும் நத்தம் விஸ்வநாதனுக்கும் என்னதான் தொடர்பு என்கிறீர்களா? சட்டசபை தேர்தலின் போதும் அதன் பின்னரும் அடுத்தடுத்து ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதில் நத்தம் விஸ்வநாதன் வீடுகள், நிறுவனங்களும் அடங்கும்.

காசா கிராண்டே தொடர்பு அம்பலம்
இந்த சோதனைகளின்போதுதான் காசா கிராண்டே தொடர்பான ஆவணங்களும் அமலாக்கப் பிரிவிடம் சிக்கியிருக்கிறது. இது தொடர்பான அமலாக்கப் பிரிவு விசாரணைகளில் காசா கிராண்டேவில் தமது முதலீடும் இருப்பதை ஒப்புக் கொண்டாராம் நத்தம் விஸ்வநாதன். பின்னர் இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டது அமலாக்கப் பிரிவு.

ஜார்ஜ் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?
இந்நிலையில்தான் நில மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிரடியாக அனிருதனை சென்னை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை கமிஷனராக ஜார்ஜ் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்கவிடாமல் இழுத்தடித்து நமக்காக நீதிமன்றத்தில் குட்டு கூட வாங்கியிருப்பாரே என அங்கலாய்க்கிறதாம் அனிருதன் தரப்பு.

தோண்டி துருவி தொங்க விடுவார்களோ?
அதேநேரத்தில் அனிருதன் சிறைக்குப் போக நேர்ந்ததால் அமலாக்கப் பிரிவு எங்கே மீண்டும் தமது தொடர்பையும் தோண்டி துருவி தொங்கவிடுமோ என பீதியில் இருக்கிறாராம் நத்தம் விஸ்வநாதன். இதனால்தான் கடந்த சில நாட்களாகாவே ஓபிஎஸ் அணியில் நத்தத்தின் தலை அவ்வளவாக தென்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

பழைய சர்ச்சை
மேலும் அதானி குழுமத்தின் சோலார் நிறுவனத்துக்காக பினாமி நிறுவனங்கள் பெயரில் நத்தம் விஸ்வநாதனின் மகன் அமரும் இந்த அனிருதனும்தான் பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் உதவியுடன் பெருமளவு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருந்தனர். இந்த சர்ச்சையில் சில ஆண்டுக்கு முன்பு தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications