ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வானார் நவநீதகிருஷ்ணன்!
சென்னை: ராஜ்யசபா இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
1991-96ஆம் ஆண்டு தமிழக அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. பின்னர் திமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பி.யானார். செல்வகணபதி அதிமுக அரசில் அமைச்சராக இருந்த காலத்தில் சுடுகாட்டு கூரைகள் அமைக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் செல்வகணபதிக்கு அண்மையில் 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தமது எம்.பி. பதவியை செல்வகணபதி ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து செல்வகணபதி ராஜினாமா செய்த எம்.பி. இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 16-ம் தேதி தொடங்கி ஜூன் 23-ம் தேதி வரை நடைபெற்றது.
அ.தி.மு.க. சார்பில் நவநீதகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்தார். இதேபோல் பத்மராஜன், மன்மதன், த.நா.வேல்முருகன், பி.என்.ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் 24-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டபோது சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணனின் வேட்பு மனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான இன்று அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணனுக்கு எதிராக எந்த வேட்பாளரும் இல்லாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நவநீதகிருஷ்ணன் முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஜமாலுதீன் இன்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நவநீதகிருஷ்ணன் எம்.பி. வாழ்த்து பெற்றார்.