நக்சல் தாக்குதலில் உயிரிழந்த வீரர் சங்கர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் தாக்குதலால் வீரமரணமடைந்த தமிழக வீரர் சங்கரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்கள் நடத்திய தாக்குதலால் உயிர் தியாகம் செய்த மாவீரர் சங்கரின் குடும்த்தினருக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நேற்று நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உள்பட 12 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்திலேயே நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நேற்று காலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 219-வது படைப் பிரிவை சேர்ந்த 12 வீரர்கள் பலியாகினர். இதில் விழுப்புரம் மாவட்டம் கழுமரத்தை சேர்ந்த சங்கர் என்ற சிஆர்பிஎப் வீரரும் உயிரிழந்துள்ளார்.
வீரமரணமடைந்த சங்கருக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.