ஈரோடு அருகே கொழுந்துவிட்டு எரிந்த அரசு பேருந்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய 37 பயணிகள்!
ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்: ஈரோட்டில் இருந்து வந்த பேருந்து சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 37 பயணிகள் உயிர் தப்பினர்.
ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. 37 பயணிகளுடன் ஓட்டுநர், நடத்துநரும் பேருந்தில் பயணித்துள்ளனர். பேருந்து எல்லீஸ்பேட்டை அருகே வந்த போது திடீரென எஞ்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளனர். மளமளவென எரிந்த தீ காண்போருக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இதனால் சற்று நேரத்திலேயே கருகி எலும்புக்கூடு போல காட்சியளித்தது. வயல்வெளிப் பகுதியில் அருகே தீ விபத்து நடந்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன ஏனெனில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே 50 மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் உள்ளது.
பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகல் நேரமென்பதால் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுவே இரவு நேரமாக இருந்திருந்தால் அனைவரும் தீக்கு இரையாகி இருக்க வேண்டியது தான் என்று கூறும் பயணிகள், அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications