நெடுவாசலுக்கு ஆதரவாக அணி திரளும் மாணவர்கள் பட்டாளம் - 100 கிராம மக்கள் திரண்டனர்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அணி திரண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் மத்திய அரசு அனுமதித்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அணி திரண்டு போராடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இயற்கை எரிவாயு எடுத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று கூறி இந்த திட்டத்துக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நெடுவாசல் பகுதி மக்கள் கடந்த 16ஆம்தேதி முதல் அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நெடுவாசல் பஸ் நிலையம் அருகே பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நெடுவயல் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடங்கிய இந்த போராட்டத்தில் முதலில் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

எதிர்க்கும் வலுக்கும்
நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்த திட்டம் மூலம் கிராமங்கள் முற்றிலும் அழிந்து, தமிழகமே பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

அதிகரிக்கும் ஆதரவு
பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நெடுவாசல் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். திரை உலக பிரபலங்கள், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தீவிரம் அடைகிறது
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தருமாறும், போராட்டத்தில் பங்கேற்க வருமாறும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். அதை ஏற்று வெளியூர்களில் இருந்தும் கல்லூரி மாணவ, மாணவிகள்
போராட்டத்தில் கலந்துகொள்ள வரத்தொடங்கி உள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைகிறது. பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 கிராம மக்கள் ஆதரவு
நெடுவாசல் மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தடையை மீறி இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை, அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று 100 கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றும் போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications