ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு.. தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. நெடுவாசல் மக்கள் அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாநிலத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டுள்ளது.
இதனை எதிர்த்து 2ம் கட்டமாக நெடுவாசல் கிராம மக்கள் 68வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்தில் மணிப்பூர், அஸ்ஸாம், நாகலாந்து மாநிலத்தில் இருந்து பலரும் பங்கேற்றனர்.
சட்டசபையில் தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை கண்டிப்பாக மாநில அரசு எதிர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முற்றுகைப் போராட்டம்
நெடுவாசல் மக்களின் கோரிக்கை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநில போராளிகள் பங்கேற்பு
நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. 68வது நாள் போராட்டமான இன்று மணிப்பூர், அஸ்ஸாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இயற்கையை அழிக்க..
இதுகுறித்து அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கேனன் பேசும் போது, "அஸ்ஸாம் மாநிலத்தில் வனப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயன்று வருகிறது. தமிழகத்தை போல் அங்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இயற்கை வழங்கிய நிலங்களை அழித்துவிட்டு வாழ முடியாது" என்று கூறினார்.