நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு 5 ஆண்டுகள் விலக்கு தேவை- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து வரும் ஐந்தாண்டுகள் விலக்களிக்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதையடுத்து, நீட் தேர்வை எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் பெற்று விடுவார்களா?. என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட சட்ட வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த மாசோதாவை சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டுத்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மசோதாவிற்கு 3 அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்த பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த உடன் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வரும்.
அன்புமணி ராமதாஸ்
இதனிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக இளைஞா் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓராண்டு விலக்கு போதுமா?
மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதையடுத்து, நீட் தேர்வை எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் பெற்று விடுவார்களா?. நீட் தேர்வை எதிர்கொள்வதற்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பயில வேண்டும்.
5 ஆண்டுகள் விலக்கு
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதால் அவர்கள் 12ஆம் வகுப்புக்கு வரும் வரை தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து வரும் ஐந்தாண்டுகள் விலக்களிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர்கள்
நீட் தேர்வில் இருந்து தற்காலிக விலக்கு பெறுவது தேவையில்லை, நிரந்தர விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மாநில அரசு ஓராண்டு மட்டுமே விலக்கு கோரி வருகிறது. அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் நீர் தேர்வு விலக்கு பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.