நீட்: கேரளாவிலிருந்து மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள்!
கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் திரும்ப வருவதற்கு வசதியாக இலவச சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் திரும்ப வருவதற்கு வசதியாக இலவச சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பல கஷ்டங்களை தாண்டி தற்போது தேர்வெழுத சென்று இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களில் நிறைய பேருக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5371 பேருக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மதுரை மண்டலத்தில் இருந்து 1550 பேரும், திருச்சியில் இருந்து 1520 பேரும், நெல்லையில் இருந்து 3201 பேரும் தேர்வெழுத செல்கிறார்கள். தென்மாநிலங்களில் இருக்கும் 70 சதவிகித பேருக்கு, கேரளாவில்தான் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு வடஇந்தியாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திரும்பி வருவதற்காக இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நீட் எழுதும் மாணவர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் இருந்து மதுரைக்கு இரவு 8, 8.15, 8.30, 8.50 ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.
எர்ணாகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 5, 7, 8 ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து 4, 6, 7.30, 8.30, 9.30 ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.