நகருக்குள் வராமல், விதிகளை மீறி பைபாஸ் சாலைகளில் பறக்கும் அரசு பஸ்கள் - தூங்கும் அதிகாரிகள்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், நகருக்குள் வராமல், பைபாஸ் சாலைகளில் அரசு பஸ்கள் சர்வ சாதாரணமாக சென்று வருவதால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
இதனை அதிகாரிகள் கவனிக்காமல் தூங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் விதிகளை மீறி பொதுமக்களை புறக்கணித்து பைபாஸ் சாலைகளில் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

அசைந்து கொடுக்காத அதிகாரிகள்:
இதுகுறித்து நாங்குநேரி, பணங்குடி பகுதி மக்கள் ஏற்கனவே பல முறை புகார் தெரிவித்துள்ளனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் அதிகாரிகள் தரப்பு எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
அரசு பஸ்கள் கண்காணிப்பு:
இந்த நிலையில் திடீரென மாலை 6 மணி அளவில் நாங்குநேரி பைபாஸ் ரோட்டில் கண்காணிப்பாளர்கள் வந்து நின்று அரசு பஸ்களை தீவிரமாக கண்காணித்தனர்.
சர்வசாதாரண பயணம்:
இதில் பல அரசு பஸ்களில் பைபாஸ் ரைடர், எண்ட் டூஎண்ட், 123 என பெயர்களை வெள்ளைதாளில் எழுதி கொண்டு பைபாசில் சர்வசாதாரணமாக சென்று கொண்டிருப்பதை காண முடிந்தது.
"பார்வையிடும்" கண்காணிப்பாளர்:
இதை எவ்வித சலனமும் இல்லாமல் கண்காணிப்பாளர் கையை கட்டி கொண்டு பார்த்து கொண்டிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதை பார்த்ததும் பெயரளவுக்கு ஒரு பஸ்ஸை நிறுத்தி ஆவணங்களை பார்த்து விட்டு அப்படியே போக சொன்னார். பிறகு செல்போன் தொடர்பு கொண்டு யாரிடமோ வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பதில் கூற மறுத்தவர்:
பைபாசில் வந்த அரசு பஸ்கள் மீது நடவடிக்கை குறித்து விபரம் கேட்டபோது அவர் பதில் எதுவும் கூற மறுத்து விட்டார்.
நடவடிக்கை கிடைக்குமா?:
சாலையின் ஓரத்தில் நின்று கொண்டும், பக்கத்தில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டும் அதிகாரிகள் பொழுதை நன்றாக போக்கினர். இது அந்த வழியாக வந்த பொதுமக்களை எரிச்சல் அடைய செய்தது. இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்காக நடவடிக்கை எடுக்கப்படுமோ, என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.












Click it and Unblock the Notifications