விதிகளை மீறி நெல்லை சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம்.. ஹைகோர்ட் உத்தரவால் அதிகாரிகள் சீல் வைப்பு
விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நெல்லை சரவணா ஸ்டோர்ஸ் கடையை இன்றே மூட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
மதுரை: நெல்லையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை விதிமுறையை மீறிக் கட்டப்பட்டுள்ளது என்பதால் இன்றே மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
சென்னையில் இயங்கி வருவது போன்றே நெல்லையிலும் சரவணா ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. சரவணா செல்வரத்தினம் விதிமுறைகளை மீறி இந்தக் கடையை கட்டியுள்ளதாக நெல்லையைச் சேர்ந்த சரத் இனிகோ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நெல்லை சரவணா ஸ்டோர்ஸ் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதுவும் இன்று மதியம் 2.30 மணிக்குள் சீல் வைக்க வேண்டும் என்று நெல்லை ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் நெல்லை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல் வைத்துள்ளனர். 7 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் தரை தளத்தில் உள்ள ரெடிமேட் மற்றும் நகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்ற தளங்களில் உள்ள ஜவுளிப் பிரிவுகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.