வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை: மழை வரும், குடையோட போங்க!
சென்னை: தென் மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் இன்று தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒருமாத காலமாக விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் வெயில் தலைகாட்டி வருவதால் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அந்தமானில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல அதிகாரி எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அநேக இடங்களில் இன்று (வியாழக்கிழமை) பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். நாளையும் (வெள்ளிக்கிழமை) கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் அதிக பட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளதாகவும் எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications