கருணாநிதிக்கு எதிராக 17 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி?
சென்னை: திமுகவில் உள்கட்சிப் பூசல் இப்போதைக்கு முடிவு பெறாது போலத் தெரிகிறது. புதிதாக தற்போது திமுக தலைவர் கருணாநிதி பதவி விலகக் கோரி 17 மாவட்டச் செயலாளர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கருணாநிதிக்கே அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
முதல் கடிதத்தை காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் அனுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தா. மோ. அன்பரசன் தீவிர ஸ்டாலின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி மறைந்த ஜோதிபாசு அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாரோ அதேபோல கருணாநிதியும் ஓய்வு பெற வேண்டும் என்பது தாமோ. அன்கோவின் கோரிக்கையாம்.
மு.க.ஸ்டாலினை தலைவராக்குங்கள்
இந்த 17 மாவட்டச் செயலாளர்களின் ஒரே கோரிக்கை திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அறிவித்து பதவியில் அமர்த்த வேண்டும். அவரது தலைமையில்தான் சட்டசபைத் தேர்தலை திமுக சந்திக்க வேண்டும் என்பதாகும்.
ஒரு வேளை அழகிரி வந்தால் சிக்கல்
தற்போது மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர கருணாநிதி குடும்பத்தில் பலர் தீவிரமாக முயன்று வருகின்றனர். அதற்கு ஸ்டாலின் தரப்பில் குடும்பத்தில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தலைவராக்கி விட்டு அழகிரியைச் சேர்க்கலாம்
அழகிரி கட்சிக்குள் மீண்டும் வருவதாக இருந்தால், அதற்கு முன்பாக ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என்பது இவர்கள் போடும் நிபந்தனையாக உள்ளது.
ரூம் போட்டு ஆலோசனை
மேலும் மு.க.ஸ்டாலினுக்கு பலம் சேர்க்கும் வகையில் பல்வேறு காரியங்களைச் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகின்றனராம். அதன்படி தற்போது ஒவ்வொரு காயாக நகர்த்தப்பட்டு வருகிறதாம்.
ஜோதிபாசு போல
எப்படி ஜோதிபாசு முதல்வர் பதவி வகித்து முடித்ததும் தீவிர அரசியலிலிருந்து விலகி கட்சியினருக்கு வழிகாட்டியாக இருந்தாரோ அதேபோல கருணாநிதியும் விலகி வழிகாட்ட வேண்டும் என்று வற்புறுத்துவது அதில் ஒரு திட்டம்.
ராஜினாமா நாடகம்
இதை கருணாநிதிக்கு வலியுறுத்தும் வகையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அதாவது ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருணாநிதிக்கு தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டதாம்.
முதல் ஆளாக அனுப்பிய தா.மோ.
அந்த அடிப்படையில்தான் முதல் ஆளாக தா. மோ. அன்பரசன், கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி வைத்ததாக செய்திகள் கூறுகின்றன.
மிரட்டல்களுக்கு கருணாநிதி பணிவாரா அல்லது கிடப்பில் போடுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.
ஆனால் நடந்தது வேறயாமே....!
ஆனால் தா.மோ. விவகாரத்தில் உண்மையில் நடந்தது வேறு என்று இன்னொரு தகவல் கூறுகிறது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக உள்கட்சித் தேர்தலில் கடும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தா.மோ. அன்பரசனை போனில் பிடித்து காய்ச்சி எடுத்து விட்டாராம் கருணாநிதி. உடனே ஸ்டாலினிடம் ஓடியிருக்கிறார் அன்பரசன். தலைவரை நேரில் போய் சமாதானப்படுத்து என்று ஸ்டாலின் கூறவே, கடந்த 5ஆம் தேதி கோபாலபுரம் போய் கருணாநிதியை பார்த்திருக்கிறார் அன்பரசன். அப்போது, கட்சியே நீதானா? நீயே கட்சியில் இருந்து ஓடிடு இல்லைன்னா உன்னையும் என்னால் நீக்க முடியும் என்று கடுமையாக கூறியுள்ளார் கருணாநிதி. இதையடுத்து தானே முன்வந்து ராஜினாமா செய்தாராம் அன்பரசன் என்று அந்த தகவல் கூறுகிறது.