ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் வழங்கியது ஏன்? ஒருவழியாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன்
Recommended Video
சென்னை: அவசர நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
2016ல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதால், தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் இரண்டாம் ஆண்டு நாளையொட்டி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 4 முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ்தான். ரபேல் விமான கொள்முதல்: காங்கிரஸ் ஆட்சியிலும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. போர் நடந்தால் 10 நாட்களுக்கு கூட ஆயுதங்கள் இல்லாத நிலையில் ராணுவத்தை விட்டுச் சென்ற காங்கிரஸ், ரபேல் பற்றி பேசுவது சரியில்லை.
[கேரள போலீஸார் துப்பாக்கிச் சூடு.. சென்னை விருகம்பாக்கத்தில் ஒரே பரபரப்பு!]
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது, பாகிஸ்தான் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அந்த நாட்டுடன் நல்லுறவை மேம்படுத்த முடியவில்லை. எல்லையில் பாகிஸ்தான் அடாவடிக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுக்கும்.
இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் தமிழக மீனவர்களுக்கு எப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைபடுகிறதோ அப்போதெல்லாம் பாதுகாப்பு வழங்குகிறது.
சபரிமலை தீர்ப்பில் தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது, ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற முடிவில் மத்திய அரசு உள்ளது.
அவசர நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது. தற்போதுகூட இமாச்சலபிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி கேட்பவர்களுக்கு அவசர உதவி வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூட மேற்குவங்கத்தில் உயிரிழந்த காங். தலைவரின் உடலை கொண்டு செல்ல ராணுவ விமானத்தை வழங்கினோம்.
தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் கருத்துக்களை எதிர்க்கவோ, மறுக்கவோ மாட்டேன். தமிழகத்தில் பாதுகாப்பு தொழிற்பூங்கா அமைக்கும் பணிக்கான முதலீடுகள் குறித்து ஆராயப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.