என்.எல்.சி ஊழியரை சுட்டுக் கொன்றார் மத்திய படை வீரர்- நெய்வேலியில் பெரும் பதட்டம்
நெய்வேலி நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த ஊழியர் ஒருவரை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொன்று விட்டார். இதனால் அங்கு தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தவர் ராஜா. இவர் இன்று 2வது சுரங்கப் பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பப் படை வீரர் தடுத்துள்ளார்.
நீங்கள் இந்தப் பகுதிக்கு வர அனுமதி கிடையாது என்று பாதுகாப்புப் படை வீரர் கூறியுள்ளார். ஆனால் அதை தாண்டி செல்ல முயன்றுள்ளார் ராஜா. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இந்த நிலையில் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் ராஜாவை சுட்டு விட்டார் மத்திய வீரர். மிக நெருக்கத்தில் வைத்து சுடப்பட்டதால் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இந்த தகவல் காட்டுத் தீ போல நெய்வேலி அனல் மின் நிறுவன தொழிலாளர்களிடையே பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான ஊழியர்களும் நிறுவனத்தின் முன்பு திரண்டு விட்டனர்.
அதேபோல மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் நிறுவன நுழைவாயில் பகுதியில் துப்பாக்கியுடன் குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
மத்திய படை வீரரின் கொடூரமான செயலைக் கண்டித்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தொழிலாளர்கள். அப்போது சிலர் கல்வீச்சில் குதித்தனர். பதிலுக்கு மத்திய படை வீரர்களும் கற்களை எடுத்து வீசித் தாக்கினர்.
தற்போது ஆலை முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.