உதகையில் கனமழையால் நிலச்சரிவு: மலை ரயில் 3 நாள்களுக்கு ரத்து
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம், கல்லாறு, குன்னூர் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இந்த மழை தொடர்ந்து பெய்ததால், அனைத்துப் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் உதகை மலை ரயில் பாதையில், கல்லாறு தாண்டி ஹடர்லி ரயில் நிலையம் அருகே 32, 33-ஆம் எண் உள்ள பாலங்களுக்கிடையே நிலச்சரிவு ஏற்பட்டது. மண் குவியலுடன் பெரிய பாறைகளும், கற்களும் சரிந்து ரயில் பாதையில் விழுந்தன. இதனால் ரயில் தண்டவாளம் மண்ணில் புதைந்ததுடன், பல்சக்கர பாதையில் உடைப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை மலை ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் குன்னூர் புறப்பட்டுச் சென்றது. அதில் 150 பேர் பயணம் செய்தனர். கல்லாறு தாண்டியபோது நிலச்சரிவைப் பார்த்த ரயில் ஓட்டுனர், உடனே ரயிலை நிறுத்தினார்.
இது குறித்து ரயில்வே மேலதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் பேருந்துகள் மூலம் குன்னூர், உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து மலை ரயில் இருப்பு பாதை பொறியாளர் கோவிந்தராஜ் (குன்னூர்), உதவிப் பொறியாளர் ஜெயராஜ் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, ரயில் பாதையில் விழுந்து கிடந்த மண், கற்களை அகற்றியும், பெரிய பாறைகளை வெடி வைத்து தகர்த்தும், சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதனால் மலை ரயில் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை வரை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.