தமிழகத்தில் திமுக அலையைத் தவிர எதுவும் இல்லை...கருணாநிதி
காஞ்சிபுரம்: தமிழகத்தில் திமுக அலையைத் தவிர வேறு எந்த அலையும் வீசவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
நீண்ட நாள் கழித்து காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளேன். என் தலைவர், நம் தலைவர் பேரறிஞர் அண்ணா இல்லத்துக்கு சென்று அவரிடம் முதலில் வாழ்த்து பெற்று, என்னுடைய பழைய நினைவுகளை அங்கே அசைபோட்டுவிட்டு இங்கு வந்தேன்.
அண்ணா தொடங்கிய தி.மு.க. ஆல விருட்சமாக தழைத்தோங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது.
ஜெயலலிதா அம்மையார் மதசார்பற்றவர் என்று கூறுகிறார். பாபர் மசூதி இடிப்பு கரசேவைக்கு ஆட்களை அனுப்பியவர் ஜெயலலிதா, பாபர் மசூதி இடத்தில் ராமருக்கு கோவில் கட்டாமல் இந்தியாவில் வேறு எங்கு கட்டுவது என்று கேட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா மீது வருமான வரி துறை வழக்கு நிலுவையில் உள்ளது. 14 வருடமாக நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு போல் வருமான வரி துறை வழக்கும் நிலுவையில் உள்ளது. நீதி அரசர் நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும். காலம் பதில்சொல்லும்,
மோடி சொல்கிறார், குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார். திமுக ஆட்சி காலத்தில் 2009-2010-ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதம். இது 2010-11-இல் 11.1 சதவீதமாக அதிகரித்தது. இதை திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள ஆவணம் கூறுகிறது. அதே வளர்ச்சி 2011-2012 அதிமுக ஆட்சி காலத்தில் 7.4 சதவீதமாக குறைந்தது. 2012-2013-இல் 4.14 சதவீதமாக குறைந்தது. இதுவும் திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள ஆவணப்படியே கூறுகிறேன்.
ஜெயலலிதாவும், சசிகலாவும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக 1996-ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்தை அணுகினர். பின்னர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். தேர்தல் பிரசாரம் என்று வாய்தா வாங்குகின்றனர். எத்தனை காலம்தான் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியும்? நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் வகையில் இந்த வழக்கில் தீர்ப்பு இருக்கும்
தி.மு.க. என்றும் முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில், அமைதி என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த ஆண்டு, கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி அதிகமாக உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தேர்தல் பிரசாரம் என்று கூறி வாய்தா வாங்குகின்றனர். உச்ச நீதிமன்றத்தையும், உயர் நீதிமன்றத்தையும் ஏமாற்றி வருகிறார்கள், நேற்று காலையில், ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதே இடத்தில் அந்த நீதிபதி அதே பதவியில் வந்து விட்டார்.
தமிழ்நாட்டில் அலை வீசுகிறது என்று சொன்னார்கள், மோடி அலை வடக்கே இருந்து புறப்பட்டு தமிழகத்தை நோக்கி வருகிறது என்கிறார்கள். அந்த அலை காங்கிரஸ் கட்சியை கலங்கடித்துவிட்டு, இங்கே உள்ள புரட்சிக்காரர்களை புரட்டிப் போட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேலே, கீழே ஆகிய திசைகளை நானும் சுற்றித் திரிந்து பார்த்தேன் எனக்கு எந்த அலையும் தெரியவில்லை. எந்த அலையும் வீசவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அலை மட்டும் தான் வீசுகிறது.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.