விஜயகாந்த்தை எதிர்த்தவர்களுக்கு வாழ்க்கை இல்லை.. பிரேமலதா ஆவேசம்
ஜெயலலிதா மரணம், அவரது டிரைவர் மரணம், கொடநாடு காவலாளி கொலை என தொடர்ந்து மர்ம சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் கொலை நகரமாகவே உள்ளது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
மதுரை: விஜயகாந்த்தை எதிர்த்தவர்களுக்கு வாழ்க்கை என்பது கிடையாது என்று அவரது மனைவியும், தே.மு.தி.க. மகளிர் அணி தலைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
பிரேமலதா விஜயகாந்த் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் வழக்கில் நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழகத்தில் அதிக பொய் வழக்கு போட்டது விஜயகாந்த் மீதுதான்.
ஆனால் விஜயகாந்த்தை எதிர்த்தவர்கள் மண்ணின் அடியில் செல்வார்கள். விஜயகாந்த்தை ஒழிக்க நினைத்த அதிமுகவுக்கு, இப்போது சின்னம் கூட இல்லாமல் சென்றுவிட்டது. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது நிலையான ஆட்சி இல்லை. பதவிக்கும், பணத்திற்கும் மட்டுமே ஆசைப்படுகிறார்கள். மக்களுக்காக எந்த நல்லதும் செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம், அவரது டிரைவர் மரணம், கொடநாடு காவலாளி கொலை என தொடர்ந்து மர்ம சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் கொலை நகரமாகவே உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டும் தெளிவான அறிக்கை இதுவரை வரவில்லை. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் இனி தமிழகத்திற்கு தேவை.
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மக்கள் முன் வந்து விட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.