தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியே இல்லை.. வதந்தியை பரப்பினால்.. சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வார்னிங்
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியே இல்லை. அதுகுறித்து சமூக வலைதளங்களில் வதந்தியை யாரும் பரப்பக் கூடாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
சென்னை: பிளாஸ்டிக் அரிசி வந்துவிட்டது. எல்லோரும் உஷாராக இருங்கள் என வாட்ஸ் அப், பேஸ் புக் என சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
இதனை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரிசிதான் அடிப்படை உணவு. அதிலேயே இப்படி வந்துவிட்டால் என்ன செய்வது என பொதுமக்களின் கலக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை என்பதே தமிழகத்தில் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கூட்டம்
இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பிளாஸ்டிக் அரிசியே இல்லை
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். அப்போது அவர், "தமிழகத்தில் 3,124 கடைகளில் இருந்து அரிசி மாதிரி எடுத்து ஆய்வு செய்தோம். அதில் ஒன்றில் கூட பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. ஆக, தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியே இல்லை.
எச்சரிக்கை
இதுகுறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை சமூக வலைதளங்களில் யாரும் பகிரவும் வேண்டாம். அப்படி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
புகார் தெரிவிக்க
உணவுப் பொருட்களில் கலப்படம், கலப்படம் செய்து விற்பனை உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதே போன்று [email protected] என்ற இ-மெயிலிலும் புகார் தெரிவிக்கலாம்.