தமிழக மக்களை ஏமாளிகளாக்கி இருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: வேல்முருகன் காட்டம்
தமிழக மக்களை தனது உரையின் மூலம் ஆளுநர் ஏமாற்றிவிட்டிருக்கிறார் என்று வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : சட்டசபையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களை ஏமாற்றி இருக்கிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக சட்டசபையின் 2018ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையோடு துவங்கியது. ஆளுநரின் உரையில் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் எந்த திட்டமும் இல்லை; முழுக்க முழுக்க மத்திய அரசை பாராட்டும் உரையாகவே இருந்தது என்று எதிர்கட்சித்தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது இதுவரை சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மோசடித்தனமான உரை இது என்று குறிப்பிட்டு உள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை
வெற்று அறிவிப்புகளும், பொருளியல் குற்ற சார்பு பழனிச்சாமி அரசைக் காப்பாற்றும் மத்திய மோடி அரசின் ஜிஎஸ்டி போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்குப் பாராட்டுக்களுமே இடம்பெற்ற அபத்தமான உரை இது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சுமார் 1.45 லட்சம் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து உரையில் ஒரு வார்த்தைகூட இல்லை.
மீனவர்கள் மீட்பு குறித்து பொய் தகவல்
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியை கடற்காவற்படை டிசம்பர் மாதத்திலேயே நிறுத்திவிட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கும் நிலையில், ஆளுநர் உரை மீனவரைத் தேடும் பணி தொடர்வதாகக் குறிப்பிடுவதை என்னென்று சொல்ல? ஒரு ஆளுநருக்கு இந்த விபரம் கூட தெரியாதா அல்லது மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து பேசி இருக்கிறாரா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு
தமிழகத்தின் வாழ்வாதாரத் தொழிலான விவசாயம் குறித்தும் ஆளுநர் உரையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாய் அறிவிக்கக் கோரும் கோரிக்கை, இதற்கு மாறாக காவிரிப் படுகையில் பெட்ரோலிய மண்டலம் அறிவிப்பு, அணுவுலை, நியூட்ரினோ, ஓஎன்ஜிசி, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்கள் என எதைப் பற்றியும் ஆளுநர் உரையில் அரசின் கருத்தில்லை.
தமிழக மக்களின் பிரச்னை
விவசாயக் கடன், விவசாயிகள் தற்கொலை, நெல் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு போதிய விலை, கரும்புக்கு நியாயமான விலை, கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை பற்றியும் உரையில் பேச்சில்லை. ‘நீட்' மசோதா ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளதே, அதைப் பற்றி உரையில் பேச்சு உண்டா? மணல் குவாரிகள், மணல் இறக்குமதி குறித்தும் ஏன் பேச்சில்லை? உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 25 ஆண்டுகால என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளியை நிரந்தரமாக்காதது பற்றி உரை குறிப்பிடவே இல்லை.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்; நேரமில்லை, எழுத இடமுமில்லை.
விரைவில் பாடம் புகட்டுவார்கள்
அதே நேரம் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் நிலைத்த வளர்ச்சியைப் பெற்றுவிடும் என்று குறிப்பிடுகிறது உரை. 2011ல் ஜெயலலிதா அறிவித்த "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்-2023" அவ்வளவுதானா? 110 விதிகளில் 2011ஆம் ஆண்டிலிருந்து அறிவித்த நூற்றுக்கணக்கான திட்டங்களின் கதி என்ன? தமிழக மக்களை தனது வெற்று உரையின் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏமாற்றி உள்ளார். "ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே" என்கின்ற பாடத்தை, எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் அதன் பாதுகாவலரான ஆளுநருக்கும் நிச்சயம் விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.