சென்னையை அடுத்தடுத்து 2 புயல்கள் தாக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையா? வானிலை மைய அதிகாரி விளக்கம்
இன்னும் சில தினங்களில் சென்னையை இரண்டு புயல்கள் அடுத்தடுத்து தாக்கப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video
சென்னை: அக்டோபர் மாதம் இரண்டு புயல்கள் சென்னையை தாக்கும் என்றும் இந்த புயல்களினால் அதிக சேதம் உண்டாகும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்ததாக வெளியான தகவல் புரளி எனக்கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கை சென்னைவாசிகள் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அதற்கு நேர்மாறாக கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை கடந்த ஆண்டு பொய்த்துப்போனது. இயல்பைவிட 62 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால் கடும் வறட்சி நிலவியது.
மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் இருந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. கல்குவாரி தண்ணீரை குடிக்கும் நிலை ஏற்பட்டது.
அதிக மழை பொழிவு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மட்டுமே தென் மேற்கு பருவ மழை பெய்யும். ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்து வருகிறது.
பருவமழை காலம்
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் தான் போதிய மழை கிடைக்கும். தென் மேற்கு பருவ மழை நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும்.
எச்சரித்ததா வானிலை மையம்?
இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்குப் பருவ மழை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும் அந்த அறிக்கையில் வடகிழக்கு பருவமழை பற்றியும், புயல்களின் பாதிப்பு பற்றியும் எச்சரிக்கை தகவலை வெளியிட்டதாகவும் பிரபல மீடியாக்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இரண்டு புயல்கள்
இந்த வார இறுதியில் வட கிழக்குப் பருவ மழை தொடங்குகிறது. அக்டோபர் 7, 12 தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது என்றும் முதலாவது புயல் 11ஆம் தேதி வாக்கிலும், 2ஆவது புயல் 15 முதல் 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களிலும் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் செய்தி பரவியது.
கரையை கடக்குமாம் புயல்கள்
முதலாவது புயலின் போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என்றும் இரு புயல்களும் கடலூருக்கும், ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதியில் கரையை கடக்கும் என்றும் அப்போது பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்பதால் அதிக அளவு சேதம் இருக்கும் என்றும் தகவல் வெளியிட்டன சில மீடியாக்கள்.
111 சதவிகித மழை
இந்தப் புயல்களால் வட கிழக்குப் பருவ மழை காலத்தில் 111 சதவிகித அளவுக்கு இயல்பைவிடக் கூடுதலாக மழை பெய்யும் என்றும், மேலும் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி கோடியக்கரைக்கும், கடலூருக்கும் இடையே பலவீனம் அடையும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.
தமிழகத்தில் மழை அளவு
இந்தப் புயல்கள் காரணமாக வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 26 அன்று தொடங்கும். வழக்கமான அளவுக்கு மழை பெய்யும். மத்திய மற்றும் தென் தமிழ் நாட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்ததாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வர்தாவை விட வாட்டுவதாக புரளி
கடந்த ஆண்டு வர்தா புயல் சென்னையை கடுமையாக தாக்கியது. பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சில தினங்கள் இருளில் மூழ்கியது சென்னை. இந்த மாதம் தாக்கப் போகும் இரண்டு புயல்கள் வர்தாவை விட மோசமாக இருக்கும் என்று பீதி கிளப்பியது அந்த செய்திகள். ஆனால் இவையெல்லாம் புரளி என இந்திய வானிலை மைய சென்னை பிரிவு செயலாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வரும் 14ம் தேதிவரை எந்த புயலுக்கும் வாய்ப்பில்லை என்கிறார் அவர்.