வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டும் லேட் தான்... ஆனால் வெளுத்து வாங்கும்- "வெதர்மேன்" எச்சரிக்கை
சென்னை: ஐப்பசி பிறந்து விட்டது. இனி அடைமழை ஆரம்பித்து விடும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நவம்பர் மாதம் சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவே அந்த மாதத்தில் திருமண தேதிகள் குறித்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
தமிழ்நாடு வெதர்மேன்' கடந்த வடகிழக்கு பருவமழை காலத்திற்குப் பின்னர் அதிகம் பின்தொடரப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் இது. இதன் சொந்தக்காரரான வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை பற்றி கணித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழையை தரும், தென் மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்து விட்டது. இந்த பருவ மழை காலத்தில், பல மாநிலங்களில், திருப்தி கரமான அளவுக்கு மழை பெய்திருந்தாலும், தமிழகத்தில் பெரிய அளவில் பெய்யவில்லை. அடுத்து, வடகிழக்கு பருவ மழை துவங்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவ மழை வழக்கமாக அக்டோபர் மாதம் 20ம்தேதி தொடங்க வேண்டும், ஆனால் அதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் பருவ மழை தொடங்குவது தாமதமாகிறது. அதாவது வருகிற 25ம் தேதிக்கு பிறகு தான் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 27க்கு மேல்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
மேலடுக்கு சுழற்சி
வங்கக் கடலில் தென் கிழக்கில் உருவான சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது பருவ மழைக்கான அறிகுறியாக எடுத்து கொள்ள முடியாது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பம் அதிகரிப்பு
வடகிழக்கு பருவ மழை 20ம்தேதி தொடங்குவதாக இருந்தால் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கும். ஆனால் அதற்கான அறிகுறிகள் தென்பட வில்லை என்று அதிகாரி கூறினார். வடகிழக்கு பருவ மழை தொடங்கும் பட்சத்தில் கடலோர மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யும். ஆனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக உள்ளது. இதுவே பருவ மழை தாமதமாக தொடங்குவதற்கான அறிகுறிகளாகும்.
தமிழ்நாடு வெதர்மேன்
கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகம் பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டும் போதுமான அளவு மழை பெய்யக் கூடும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த ஆண்டு பருவமழை தீபாவளிக்கு பின்னரே தீவிரமடையும் என்று கூறியுள்ளார்.
நவம்பரில் தீவிரம்
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நவம்பர் மாதம் மழை தீவிரமடையும் என்றும், அந்த மாதத்தில் திருமணம் நிச்சயம் செய்துள்ளவர்கள் சற்றே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில், புயல் சின்னங்கள் உருவாகலாம். மழை துவங்கியதும், அதன் தாக்கம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு, அதிகாரப்பூர்வ மாக வெளியிடப்படும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வலுவிலந்த தென்மேற்கு பருவமழை
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு யைம இயக்குநர், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து வருகிறது. மீதம் உள்ள பகுதிகளில் கூட 2 அல்லது 3 நாட்களில் வலுவிழப்ப தற்கான சாதகமான சூழல் தென்படுகிறது. அதனால் தமிழகம் புதுச்சேரியில் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
சென்னையில் மேகமூட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப் புள்ளது.
சென்னையில் வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை யாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மழைக்கான முன்னேற்பாடுகள்
புரட்டாசி மாதம் மழையோடு பிறந்தது. அதன்பிறகு சென்னையில் அதிகம் மழையில்லை. அதே நேரத்தில் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளதால் சென்னைவாசிகளும் முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.