மோடிக்கு தென்னிந்தியாவில் செல்வாக்கு இல்லை... குஷ்பு
சென்னை: வட இந்தியாவில் இருப்பது போல மோடிக்கு தென்னிந்தியாவில் செல்வாக்கு இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
எல்லா குடும்பத்திலும் இருப்பது போல திமுகவிலும் குடும்ப சண்டைதான் நடக்கிறது. அது விரைவில் சரியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை குஷ்புவிற்கு சீட் கொடுக்காத விரக்தியில் காங்கிரஸ், பாஜக, அல்லது ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக குஷ்பு வார இதழ் ஒன்றிர்க்கு பேட்டியளித்துள்ளார்.
நான் சீட் கேட்கவே இல்லை
நான் தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவே இல்லை. அப்புறம் எப்படி எனக்கு ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படும்?. வேறு கட்சியில் நான் சேரப்போவதாக கூறியது எல்லாம் வெறும் வதந்தி.
இந்திப்பட சூட்டிங்
என் கணவர் இந்திப்படம் இயக்கப் போகிறார். அதற்கு லொகேசன் பார்ப்பதற்காக ஜெய்பூர் போனோம். நேரடி விமானம் எதுவும் இல்லை என்பதால் டெல்லி போய் ஜெய்ப்பூர் போனோம். உடனே கண், காது, மூக்கு வைத்து கதை கட்டி விட்டுவிட்டார்கள்.
குடும்ப சண்டை
எல்லா குடும்பத்திலும் இருப்பது போல திமுகவிலும் குடும்பச்சண்டைதான் நிலவுகிறது. விரைவில் பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும். அதனை அரசியலாக பார்க்கக் கூடாது.
17 நாள் பிரசாரம்
என்னுடைய மகள்களின் தேர்வினை கருத்தில் கொண்டே நான் பிரசாரத்திற்கான தேதியை மாற்றிக் கேட்டு வாங்கியிருக்கிறேன். கட்சிக்காக 17 நாட்கள் தொடர்ந்து பிரசாரம் செய்யப் போகிறேன்.
தலைவரின் வழி நடப்பேன்
நான் திமுகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன். அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இதுவரை வந்ததில்லை. தலைவரின் வழி நடக்கும் தொண்டராகத்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கிறேன்.
மோடி நல்ல பேச்சாளர்
மோடி நல்ல பேச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வட இந்தியா அளவிற்கு தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பது என்னோட கணிப்பு.