வந்தா வாங்க. வராட்டி தனியா இருங்க.. நாங்க மக்களை சந்திச்சிக்குறோம்.. ஓபிஎஸ் அணி அதிரடி
அதிமுக இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை தடுக்கும் நோக்கில் தான்தோன்றித்தனமாக கருத்துகளை கூறுவதற்கு பதிலாக தனித்து செயல்பட்டு கொள்ளுங்கள் என்று கே.பி. முனுசாமி கூறினார்.
சென்னை: அதிமுக இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இல்லை எனில், நீங்க தனியாக செயல்படுங்கள் என்று சசிகலா அணிக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்திய தம்பிதுரை, முதல்வராக எடப்பாடிதான் தொடருவார் என்று தெரிவித்தார். இந்நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்வராக எடப்பாடியே தொடர்வார் என்று தம்பிதுரை கூறினார். முதல்வர் பதவியை நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்டது சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு விரட்டுவது, ஜெயலலிதாவின் மரணத்தில் சிபிஐ விசாரணை ஏற்படுத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தினோம்.
இதுபோல் மூன்றாம் தர அரசியலை நடத்தி வரும் தம்பிதுரை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறக் கூடாது என்பதற்காகவே தம்பிதுரை, சிவி சண்முகம், ஜெயகுமார் என ஆளுக்கு ஆள் பேசுகின்றனர். உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் தனியாக சந்தித்து செயல்பட்டு கொள்ளுங்கள். நாங்கள் மக்களை சந்தித்துக் கொள்கிறோம் என்றார்.