அனிதா தற்கொலை பற்றி இப்போது விசாரிக்க எதுவுமில்லை.. கைவிரித்தது சுப்ரீம் கோர்ட்
அனிதாவின் தற்கொலை பற்றி இப்போதைக்கு விசாரிக்க எதுவுமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
டெல்லி: அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் பற்றி தற்போது விசாரிக்க எதுவுமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தினால் கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

தடை கோரி வழக்கு
இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

அவசர வழக்கு
அனிதா மரணம் தொடர்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை, அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது.

விசாரிக்க ஏதுமில்லை
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா தற்கொலை தொடர்பாக தற்போது விசாரிக்கவோ கருத்து கூறவோ ஏதுமில்லை என்று தெரிவித்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்.

வழக்கு ஒத்திவைப்பு
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு இதனை கையாள வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications